Monday, August 6, 2012

ஆன்ட்ராய்டு(Android) போன்ற ஸ்மார்ட்ஃபோன்களில் தமிழ்(அல்லது எந்த பிராந்திய மொழி) வலைத்தளங்களை, வலைபூக்களை(blogspots) காண்பது எப்படி?



1. Google market/play வில் இருந்து ஓபரா மினி(Opera mini) மொபைல் உலாவியை நிறுவுக.
2. இப்போது உங்கள் மொபைலில் உள்ள ஓபரா மினி உலாவியை தொடங்குக
3. ஓபரா மினி உலாவியின் முகவரி பட்டியில்(Address bar) "opera:config" [மேற்கோள் இல்லாமல்] என டைப் செய்து enter தட்டவும்
4. இப்போது வரும் பக்கத்தின் அடிவரை scroll செய்தால் "use bitmap font for complex scripts" என்று ஒரு தெரிவு(option) வரும். முடக்கப்படிருக்கும்(No) அந்த தெரிவை செயல்படுத்தவும்(Yes).

அவ்வளவுதான்​​... :) இனி நீங்கள் எந்த தமிழ் இணையதளத்தைப் படிக்க வேண்டுமோ அதை திறந்து பாருங்கள் எழுத்துருக்கள் தெளிவாக இருக்கும்.

குறிப்பு:
1. நினைவிருக்கட்டும் இந்த முறையில் நீங்கள் தமிழ்(அல்லது வேறு எந்த மொழி) வலைபக்கங்களை பார்க்க/படிக்க மட்டுமே முடியும், எழுத முடியாது. ஆனால் இதற்க்காக நீங்கள் எந்த எழுத்துருக்களையும் உங்கள் மொபைல்போனில் நிறுவ தேவை இல்லை.
2. உண்மையில் இந்த முறையில் உலாவி ஒரு முழு வலைப்பக்கத்தையும் ஒரு bitmap பிம்பமாகவே காட்டுகிறது. எனவே, இந்த முறையில் (தமிழ்)மொழி ஒரு பொருட்டள்ள அனைத்து மொழி வலைப்பக்கங்களுமே சரியாக வரும்.

Tuesday, July 24, 2012

உலாவியில் பயன்படும் சில பயனுள்ள குறுக்கு விசைகள்(shrot cuts)



  கணினியில் வேலை செய்பவர்களுக்கு விசைப்பலகைக்கும், சுட்டெலிக்கும் இடையே பரிவர்த்தனை செய்தே பல மணிநேரங்கள் வீணாகிறது.  அந்த வீணாகும் நேரத்தை குறைத்தால் உங்களின் productivity எனப்படும் உற்பத்திதிறன்(நான் browsing செய்வதில் என்னத்த உற்பத்திதிறன் இருக்குன்றீங்களா?) அதிகரிக்கும்.  அதற்குதான் கணிணியில் பயன்படுத்தப்படும் எல்லா செயலிகளுமே(Applications) குறுக்குவிசைகளுடன்(shortcuts) வருகிறது.  இந்த பதிகையில் நாம் உலாவியில் பயன்படுத்தப்படும் குறுக்குவிசைகளை பற்றி பார்ப்போம்.

  இணையதளத்தில் இன்று Browser எனப்படும் பல உலாவிகள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொருவரும் தனக்குப்பிடித்தமான ஒரு உலாவியைப் பயன்படுத்துகிறார்.  பலவிதமான உலாவிகள் இருந்தாலும் சில உலாவிகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகின்றன உதாரணமாக ஃபயர்பாக்ஸ், கூகிளின் குரோம், குரோமியம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஒபேரா, சபாரி ஆகிய உலாவிகளை சொல்லலாம்.  இது தவிர எபிக்(இது பெங்களூரில் உள்ள ஒரு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது) போன்ற பல சிறிய அதிகம் பிரபலமாகாத உலாவிகளும் உள்ளன.  பல விதமான உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலான குறுக்குவிசைகள் எல்லாவற்றிலும் பொதுவாகவே இருக்கிறது.  நல்ல வேளையாக ஆப்பிளோ, மைக்ரோ சாஃப்டோ, சாம்சங்கோ குறுக்குவிசைக்கு பேடண்ட்(patent) எனப்படும் உரிமத்தை வாங்கிவைக்கவில்லை ;-).  உங்களுக்கு ஆப்பிளுக்கும், மைக்ரோசாஃப்ட்டுக்கும் இடையே வழக்கான trash, recyclebin பிரச்சனை தெரியும்தானே?.  சரி அந்த கதைய முடிஞ்சா இன்னொரு இடுகைல பாத்துக்கலாம், இப்ப shortcut-க்கு வருவோம்.  கீழ்காணும் குறுக்குவிசைகளில் ஒன்றிரண்டைத்தவிர மற்ற எல்லாமும் எல்லா உலாவிகளிலும் இயங்கும்.

1.  Address bar எனப்படும் முகவரிப் பெட்டிக்குச் செல்ல Ctrl + l (அ) Alt + d

2.  புதிய பக்கத்தை(tab-ஐத்)  திறக்க Ctrl + t

3.  புதிய சாளரத்தை (window-ஐத்) திறக்க Ctrl + n

4.  தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தை tab-ஐ மூட/நீக்க Ctrl + w

5.  கடைசியாக மூடிய(மறதியிலோ [அ] தெரிந்தோ :)) tab-ஐத் மீண்டும் திறக்க Ctrl + shift + t

6.  தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தில் ஒரு வார்த்தையோ (அ) வாக்கியத்தையோ தேட Ctrl + f. பிறகு தேடவேண்டியதை உள்ளிட்டு enter-ஐத் தட்டவும்.

7. history எனப்படும் முன்னதாக(நேற்றோ, போன வாரமோ, போன மாதமோ) பார்த்த பக்கங்களை அறிந்துகொள்ள Ctrl + h

8.  நீங்கள் browsing செய்தபோது சேகரிக்கப்பட்ட எல்லா தகவல்களையும் அழிக்க Ctrl + shift + delete

9.  உங்கள் உலாவியில் திறந்திருக்கும் tabகளில் முதலாவதிற்கு செல்ல Ctrl + 1, 2-வதிற்கு செல்ல Ctrl + 2, ... கடைசி tab-க்கு செல்ல Ctrl + 9.  (இது  குரோம், குரோமியம் தவிர்த்த ஒரு சில உலாவிகளில் வேலைசெய்யாது).

10.  பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு அடுத்த tab-க்கு செல்ல Ctrl + tab key அ Ctrl + page down button.

11.  பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு முந்தைய tab-க்கு செல்ல Ctrl + shift + tab key அ Ctrl + page up button.

12.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in செய்ய, பெரிதாக்க Ctrl + + (அ) Ctrl + mouse scroll up

13.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom out செய்ய, சிரிதாக்க Ctrl + - (அ) Ctrl + mouse scroll down

14.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in/out பெரதோ/சிறிதோ செய்தபின், மீண்டும் சரியான அளவுக்கு கொண்டுவர Ctrl + 0

15.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை அச்சிட Ctrl + p

16.  உலாவியை மூட(close) Alt + f4 <--function key

முதலில் குறுக்குவிசைகளை பயன்படுத்துவது சிரமமாக இருக்கும்.  பிறகு சில நாளில் பழக்கத்தில் வந்துவிடும்.  மவுசு(அட கம்ப்யூட்டர்ல இருக்குற mouseங்க) இல்லாமல் இயக்கிட வாழ்த்துகள் ;)

குறிப்பு:
இந்த குறுக்குவிசைகளை தவிர்த்து உங்களுக்கு வேறு எதேனும் புதியதாக தெரியுமென்றால் அதை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்(அம்மா சொல்லித்தந்த்தில்லையா ஷேரிங்...).  எனக்கும் இந்த பதிவை படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Monday, July 23, 2012

படித்த புத்தகம் - ஜெயமோகனின் உலோகம் நாவல்


புத்தக தலைப்பு :  உலோகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
வகை : சாகச எழுத்து(த்ரில்லர்)


 ஈழத்து இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வருகிறான்.  அவன் இயக்கத்தின் சில பல உத்தரவுகளை நிறைவற்றிவட்டு (கொலைகள்தான்) டில்லிக்கு செல்கிறான்.  இயக்கத்தின் முக்கியப்புள்ளியான ஒருவர் இந்தியா வந்து, இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், இயக்கத்தின் துரோகியாக கருதப்படும் அவரை கொல்வதுதான் அவனுக்கு இடப்பட்ட பணி.  அதை அவன் எப்படி செய்கிறான், செய்வதற்க்குள்ளான காலத்தில் அவன் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது, என்ன சிக்கல்கள், பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை அவனுடைய பார்வையிலே சொல்லுவதுதான் இந்த நாவல்.   ஒரு கொலைகாரன் எப்படி செயல்படுவான், அவனுடைய எச்சரிக்கைத்தன்மை விழிப்புணர்வு, நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி ஊகிப்பது, பொறுமை, காத்திருப்பு போன்று பல விஷயங்களை கண்முன்னால் விரிக்கிறது இந்த நாவல்.

 கதை முழுவதுமே ஒரு flash back உத்தியில்  விவரிக்கப்பட்டுள்ளது.  கதையின் கரு கொலையும், துரோகமும் மட்டுமே, வரும் உத்தரவுக்கு அப்படியே அடிபணியம் ஒரு இயக்கப்போராளியின் சுயசரிதை எனக்கூட இந்நாவலை சொல்லலாம்.  கதையினூடே ஆங்காங்கே ஜெயமோகனின் முத்திரையான பல வாக்கியங்களைப் பார்க்கலாம்.  ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களில் வருவதுபோலொவே இதிலும் காமம் பற்றிய கருத்துகளும், நிகழ்வுகளும் உண்டு.  போர் பற்றி அறியாத, குண்டுவீச்சு பயம் பார்த்திராத, உயிர்பயம் கண்டறியாத சினிமா மட்டுமே வாழக்கை என வாழ்பவர்களை ஆங்காங்கே பகடி செய்திருக்கிறார்.

 நாம் பத்திரிக்கையில் படிக்கும் பல கொலைகளும் இப்படி நடந்து, வேறு சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கும என்பதற்க்கு கூட சாத்தியங்கள் அதிகமே.  இயக்கங்கள் செயல்படும் விதம், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா -raw- என பல விஷயங்கள் கதையின் போக்கில் வந்து போகிறது.  ஒரு நாவலை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கென ஒரு ஒப்பற்ற தனித்தன்மையை(uniqueness) தந்து, அந்தந்த பதாபாத்திரமாகவே யோசித்து எழுதும் ஜெயமோகனின் அந்த "டச்" இந்த நாவலிலும் காடு, ஏழாம் உலகம் நாவலில் இருப்பதுபோலவே உண்டு. நாவலின் பல கதாபாத்திரங்கள் இலங்கைத்தமிழர்கள் என்பதால் ஆங்காங்கே இலங்கைத்தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதை முதலிலேயே குறிப்பிட்டுளார்.

 நான் படித்த ஜெயமோகனின் பிற நாவல்களான காடு, ஏழாம் உலகம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டளவில் உலோகம் சற்று குறைவே(பக்க எண்ணிக்கை, தரம் 2-ம்).  ஆனால், உலோகம் எழுதப்பட்டுள்ள தளம் வேறு.

Wednesday, July 4, 2012

கூகிளில் சிறப்பாக தேடுவது எப்படி? பாகம் - 1 (google search part 1)

கூகிளில் தேடுவதற்க்கு ஒரு இடுகை தேவையா என்று எண்ணலாம்.  நாம்தான் தினமும் தேடுகிறோமே அப்புறமென்ன இருக்கிறது கூகிளில் இன்னமும் சிறப்பாக தேட என்கிறீற்களா..?  உண்மையாக சொல்றதுனா கூகிள் தேடலை, கேட்டத கொடுக்குற காமதேனு, அட்சயபாத்திரம், கற்பகவிருட்சத்துக்கூட ஒப்பிடலாம்(அதுக்காக நீங்க ஆறாப்புல படிச்சப்ப தொலைச்ச பென்சில கூகிள்ட்ட தேடித்தர சொன்ன தராது).  ஆனா அத வச்சு நாம எப்புடி தேடறொம் அப்டின்றதுலதான் இருக்கு சூட்சுமம்.  சரி வாங்க சிறப்பா தேடலாம்.

1. இரட்டை மேற்கோள் குறி தேடல் - "தேடவேண்டிய விஷயம்" (double quotes search)
searching without quotes
search without quote
உங்களுக்கு இந்தியாவோட வரலாறு வேணும்னா என்ன பண்ணுவீங்க history of india அப்டீனு தேடுவீங்க இல்லயா.. இப்படி தேடும்போது கூகுள் history, india அப்டீன்ற 2 வார்த்தையதான் தேடும்.  அதாவது இந்த 2 வார்த்தை இருந்தாலும், 2-ல ஏதாவது ஒரு வார்த்தை இருந்தாலும், அது எல்லாமே தேடல் முடிவுகளா வந்துடும்.  அப்படீனா history of england-னு ஒரு பக்கம் இருந்து அதுல ஏதாவது ஒரு இடத்துல india அப்டீனு ஒரு வாரத்தை இருந்தா அந்த பக்கமும் தேடல் முடிவுகளில் வந்துடும்.  ஆனா நாம தேடி வந்தது history of india-தான்.

search with quotes
search with quote
இங்கதான் இரட்டை மேற்கோள் குறி தேடல் உதவும்.  இந்த தேடல் நீங்க ""-குறிக்குள்ள என்ன கொடுக்குறீங்கலோ அந்த வாக்கியத்தை அப்படீயே தேடும், அதாவது history of india அப்டீன்ற வாக்கியம் இருக்குற பக்கத்த மட்டும் தான் தேடல் முடிவுல தரும்.  கீழே இருக்குற படத்துல தேடல் முடிவுகளோட எண்ணிக்கைய பாருங்க புரியும் ;)




2. தேடலில் வரும் முதல் முடிவைத்தான் படிக்கப்போகிறேன் - I am feeling lucky
தேடலின் முடிவுகளில் முதலாவதாக வரும் சுட்டி(link)யைதான் பார்க்கப்போகிறார்களா.. அப்படினா 'google search'-க்கு பதிலா அதுக்கு பக்கத்லயே இருக்குதுபாருங்க இன்னொரு பொத்தான்(button) 'I am feeling lucky' அப்டீனு அத அமுக்குங்க நேரா தேடலில் வர முதல் லிங்க்குக்கே கூட்டிப்போயிரும்.   கீழே இருக்குற படத்துல I am feeling lucky button வட்டம்போட்டு காட்டியிருக்கு
i am feeling lucky
i am feeling lucky

3. பிடிஎஃப்(pdf) கோப்பு(file) மட்டும்தான் வேண்டும் - தேடவேண்டிய விஷயம் filetype:pdf
 சரி எனக்கு திருக்குறள் சம்மந்தப்பட்ட pdf கோப்பு வேணும் எப்படி தேடுவீங்க..? 'Thirukkural' அப்டீனு அடிச்சி தேடுனா தமிழ்விக்கிப்பீடியாவுல ஆரம்பிச்சு உங்களுக்கு தேவையேயில்லாத எதையெல்லாமோ காட்டுதா... ஆனா ஒரு pdf கூட இல்ல.  சரி 'Thirukkural pdf' அப்டீனு தேடலாமா.. ஆங் இப்ப பாத்தா அங்கொன்னும் இங்கொன்னுமா ஒண்ணு, ரெண்டு pdf கோப்பு மட்டும் இருக்கா.. :).  கொஞ்சம் இருங்க இன்னுங்கூட சிறப்பா தேடலாம் எப்புடி..? இப்புடி
'thirukkural filetype:pdf' அப்டூனு தேடிப்பாருங்க.. அட்டா வந்துருக்குற எல்லாமே pdf தான்.

இது pdf-க்கு மட்டுமில்ல ppt, doc, odt அப்டீனு எதுக்குவேணாலும் பயன்படுத்தலாம்.  செய்ய வேண்டியதெல்லாம் "[நீங்க தேடவேண்டியது] filetype:[என்ன வகையான கோப்பு வேண்டுமோ அதோட பின்னொட்டு/நீட்சி(suffix/extention)]" அப்டீனு போட்டு கூகுள்ள தேடுங்க.

4. ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம்(அருஞ்சொற்பொருள்) தேட - define:ஆங்கில வார்த்தை (முக்காற்புள்ளி(colon)->: இல்லாமல் define ஆங்கில வார்த்தை எனவும் தேடலாம்)
ஒரு ஆங்கில வார்த்தைக்கு(எ-கா:podium-ற வார்த்தை) பொருள் தெரியலனா உடனே கூகிளில் meaning podium அப்டீனு தேடுவோம் இல்லயா.. இப்படி தேடுனா அது ஒரு online dictionary பக்கத்துக்கு போகும், அப்புறம் அந்த பக்கத்துக்குப்போய் அரத்தம் பாக்கணும்.  ஆனா define podium அப்டீனு தேடுனா நமக்கு தேவையான அர்த்தம் உடனே கிடைக்கும்.  படத்தைப்பாருங்க


இந்த இடுகையோட அடுத்த பாகத்துல இன்னும் சிறப்பா தேடலாம் கொஞ்சம் காத்திருங்க.. ;)


Tuesday, June 26, 2012

படித்துக்கொண்டிருக்கும் இணையதளப்பக்கத்தை பிடிஎஃப் கோப்பாக(webpage to pdf) சேமிப்பது எப்படி?


  அடிக்கடி உங்களுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்குமே... இணையத்துல உலாவிகிட்டிருக்கம்போது தீடீர்னு ஒரு பக்கம் உங்களுக்கு ரொம்ப புடிச்சிபோயிடும், ஆனா அந்த பக்கம் ரொம்ப நீளமா இருந்திருக்கும்.  உடனே இந்த பக்கத்த சேமிச்சு வச்சிக்கிட்டு [சேவ்(save) பண்ணிக்கிட்டு] அப்புறமா படிக்கலாம்னு தோணும்.  என்ன பண்ணூவீங்க..? File -> save/save as (அப்டி இல்லனாக்க குறுக்குவிசை[short cut] ctrl+s) கொடுத்து சேவ்(save) பண்ணுவீங்க.  இங்க என்ன பிரச்சனைனா அந்த ஒரு பக்கம் ஒரு .html கோப்பாவும் அந்த ஒரு .html கோப்புக்கு துணை கோப்புகளா(supporting files) சில பட கோப்புகளும், மற்ற சில கோப்புகளும் சேவ் ஆகும்.  ஒருவேளை நீங்க மறந்துபோயி ஏதாவது ஒரு கோப்பு இல்லனா ஒரு அடைவினை(directory) அழிச்சிட்டா(delete), நீங்க சேவ் பண்ண பக்கம் ஒழுங்கா தெரியாது.  இது மட்டுமில்லாம நீங்க சேவ் பண்ண மொத்த கோப்புகளோட அளவும்(size) அதிகமா இருக்கும்.

இதெல்லாத்துக்கும் பதிலா நீங்க பாத்துக்கிட்டிருக்க அந்த பக்கத்த ஒரு ஒற்றை பிடிஎஃப் கோப்பா சேமிச்சுட்டா ரொம்ப எளிமையா போயிடும் இல்லயா....? :).
நாம் இதை 2 வழிகளில் செய்யலாம்,
வழிமுறை 1.
இந்த வேலைய செய்யறத்துக்குனே ஒரு தனி இணையதளமே(website) இலவசமா இயங்கிட்டிருக்கு. [இத அந்த இணையதளம் ஒரு இலவச இணையசேவையா(webservice) தராங்க.  [இணையசேவைனா என்னன்னு இன்னோரு பதிவில்/இடுகையில்(blog post) பார்ப்போம்.] நீங்க செய்ய வேண்டியதெல்லாம் படிச்சிட்டிருக்கிற அந்த பக்கத்துடைய சுட்டி(link or URL(Uniform Resource Locator)), அதாங்க முகவரி பெட்டி(address-bar)-ல இருக்குற அந்த வரிய அப்புடியே காப்பி(copy) பண்ணி அத http://pdfmyurl.com(இணையதளத்தோட பேரே விஷயத்தை சொல்லிடுது) அப்டீன்ற இந்த இணையதளத்துல கொடுத்தா போதும் அத அவங்க ஒரேயொரு பிடிஎஃப் கோப்பா மாத்தி கொடுத்துடும்.  அத சேவ் பண்ணிக்கோங்க.. அவ்ளோதான்.
pdfmyurl.com
மேல இருக்குற படத்துல நீல வண்ண அம்புக்குறி காட்டுற இடத்துல உங்க link address போட்டுட்டு சிகப்பு வண்ண அம்புக்கறி காட்டுற இடத்துல இருக்குற "P" அப்டீன்ற பட்டனை அழுத்துங்க நீங்க கொடுத்த பக்கத்தை பிடிஎஃப் கோப்பா மாத்திட்டு அத எங்க சேவ் பண்றதுனு ஒரு தகவல் பெட்டி வரும் அதுல கோப்புக்கு ஒரு பேர போட்டு சேவ் பண்ணிக்கோங்க அவ்ளோதான். ;-)

வழிமுறை 2.

ரொம்பவே எளிமையான வழி இது.
 நீங்க பாத்துகிட்டிருக்குற பக்கம் உங்களுக்கு புடிச்சிடிச்சா உடனே CTRL+p(அச்செடுக்கறத்துக்கான) அப்டீன்ற குறுக்குவிசையை அழுத்துங்க ஒரு சின்ன window திறக்கும் அதுல 'Print to file'  (அ) 'Print file' அப்டினு ஒரு option இருக்கும் அதை தேர்ந்தெடுத்து சேமிக்கப்போற கோப்புக்கு ஒரு பெயரும், எங்க சேமிக்கனும்னு path கொடுத்து OK, Submit கொடுங்க அவ்ளோதான்...
 நீங்க எல்லாரும் எப்படியும் ஃபயர்பாக்ஸ்(Firefox), கூகுள் குரோம்(Google Chrome), குரோமியம்(Chromium), ஒபேரா மாதிரியான உலாவிகளதான் பயன்படுத்துவீங்கனு நம்பறேன்.  எல்லா செயலிகள்ளேயும்(Applications) இருக்குற மாதிரி உலாவிகளிளும்(Browser) அச்செடுப்பதற்க்கு(Print) ஒரு option ஏதாவது ஒரு menubar-ல இருக்கும் 90% பெரும்பாலும் 'File' menu-ல இருக்கும்.  அதுல mouse click பண்ணுங்க இல்லனா ctrl+p விசையை பயன்படுத்துங்க..

Thursday, May 31, 2012

வெற்றித்திருமகன் விஸ்வநாதன் ஆனந்த்(Viswanathan Anand)..


டென்னிஸ் சாம்ராஜ்யத்திற்கு ஒரு ரோஜர் ஃபெடரர் போல்,  கோல்ஃப் சாம்ராஜ்யத்திற்கு ஒரு டைகர் உட்ஸ் போல்,  சதுரங்க சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த்.

Tuesday, May 8, 2012

நொ மேன்'ஸ் லேண்ட்(No Man's Land-2001 Bosnian movie) - போஸ்னிய மொழித் திரைப்படம் ஒரு பார்வை


கன்னிவெடியில் மாட்டிக்கொண்ட ஒருவனின் கதி என்னவாகிறது என்கிற ஒரு வரி விஷயம்தான் கதை.

 கதை சொல்லப்பட்டவிதமும், திரைக்கதையும்(இயக்குனரின் பெயர் டேனிஸ் டனோவிக்)  உங்களைப்  படத்திலிருந்து ஒரு நொடி கூட இப்படி அப்படி நகரவிடாது.  படத்தில் 3-லிருந்து 5 பேர் மட்டுமே மிக முக்கிய கதாபாத்திரங்கள், மற்ற அனைத்தும் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்துபோகக்கூடிய சிறிய பாத்திரங்கள் மட்டுமே.  படத்திற்கு imdb-ல் 8.0 மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளது(பலரின் ஓட்டுகளின் சராசரி).  இரு நாடுகளின் எல்லையில் கதை துவங்குகிறது, ஒரு வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி ஒரு நாட்டின் வீரர்கள்அணியாக வருகிறார்கள் அதிகப்படியான பனிமூட்டததின் காரணமாக வழிதப்பி இரவில் ஒரு இடத்தில் தங்குகிறார்கள்.  மறுநாள் பொழுது விடிந்ததும் எதிரிநாட்டின் படைக்கருகில் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள் அதை அறிந்து சுதாரிக்கும்முன்பே தாக்குதலுக்கு ஆளாகி ஒருவனைத்தவிர(அவனும் இரண்டு புல்லட்டுகளை உடம்பில் சுமந்துகொண்டிருக்கிறான்) எல்லோரும் இறந்துவிடுகிறார்கள்.  எதிரிநாட்டு படை 2 பேரை அனுப்பி யாராவது உயிரோடு இருக்கிறார்களா.. பிரச்சனைகள் ஏதும் உண்டா என அறிந்துவர அனுப்புகிறது.  அவர்கள் இறந்துபோன ஒருவனை இழுத்துவந்து ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் ஒரு கன்னிவெடியை வைத்து அதன் மேல் அவன் பிணத்தை கிடத்தி கன்னிவெடியை செயலாக்குகிறார்கள்.  இறந்த உடலை தூக்கினால் கன்னிவெடி வெடித்துவிடும், அதனால் பிணத்தை தூக்க வரும் அவனைச்சேர்ந்த மற்ற ஆட்களும் அப்பொழுது இறந்துவிடுவார்கள் என்று 2 பேரில் ஒருவன் விளக்கமளிக்கிறான்.  அப்பொழுது பதுங்கியிருந்த அடிபட்ட எதிரி வீரன் 2 பேரில் ஒருவனை சுட்டுக்கொன்றுவிடுகிறான்.  இதன் பிறகு கொஞ்சநேரத்தில் கன்னிவெடியின் மேல் கிடத்தப்பட்டவன் மயக்கத்தில் இருந்து எழுகிறான் அவன் உண்மையில் சாகவில்லை.  அதன் பிறகு அந்த மூவருக்கும் இடையில் என்ன விதமான சம்பாஷனைகள் நடக்கிறது, அவனைக்காப்பாற்ற மற்ற இருவரும் என்ன யோசனை செய்கிறார்கள் அது செயலாக்கப்பட்டதா அவன் காப்பாற்றப்பட்டானா.. என்பதுதான் மீதிப்படம்.

இதற்க்கிடையில் ஊடகங்கள் தங்கள் சேனலை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றன,  அரசியல், இராணுவம், ஐநா(UN) பாதுகாப்புப்படை போன்றவற்றிற்க்கு போரின்போது என்னென்ன பிரச்சனைகள், நிர்பந்தங்கள் வருகின்றன... அவை எப்படி கையாளப்படுகின்றன என்பது அருமையாக காட்டப்படுள்ளது.

கன்னிவெடியில் மாட்டிக்கொண்டவனை காப்பாற்ற வரும் வல்லுனர், கன்னிவெடியினை பார்த்ததும் இவனை காப்பாற்ற முடியாது, அவன் முன்னரே இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  கடைசியில் சூழலின் நிர்பந்தத்தாலும், கட்டாயத்தினாலும் அந்த கன்னிவெடியில் சிக்கிய மனிதன் காப்பாற்றப்படாமலே ஊடகத்திற்கும், வெளி உலகத்திற்கும் காப்பற்றப்பட்டதாக காட்டப்பட்டு படம் முடிகிறது.  படம் முடியும்போது எதுவெல்லாம் நாம் உண்மை என நம்புகிறோமோ அதில் பல உண்மைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை உணருவதும் அதனால்  உங்கள் மனம் கணத்திருப்பதும் உண்மை.

1 1/2 மணிநேரம் மட்டுமே ஓடும் சிறிய படம் ஆனால் கண்டிப்பாக எல்லோரும்(குறிப்பாக வித்தியாசத்தை விரும்பும் உலக சினிமா விரும்பிகள்) பார்க்கவேண்டிய திரைப்படம்.

விருதுகள்:
இந்த திரைப்படம் 2002-ம் ஆண்டிற்கான சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதையும், 2001 ஆண்டு சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதையும், 2001-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

குறிப்பு:
No man's land - என்கிற ஆங்கில வாக்கியத்திற்கு யாரும் இதுவரை ஆக்ரமிக்காத, குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்குறிய நிலப்பகுதி என்று பொருள்.

மற்றுமொரு குறிப்பு:
இந்தப்படம் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வென்ற அதே 2001-ம் ஆண்டில்தான் இந்தியாவிலிருந்து இந்தி திரைப்படமான அமீர்கானின் 'லகான்' படமும் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டியிலிருந்தது.


Tuesday, April 24, 2012

நீங்களும் எழுத ஆரம்பியுங்கள்... உலகுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலை படித்தேன்.  அதன் பிறகு அவரின் கோபல்ல கிராமம், அந்தமான் நாயக்கர் (இந்த 3ம் தொடர் நாவல்கள்), அவருடைய எல்லா சிறுகதைகளையும் ஒரே தொகுப்பாக கொண்டுவந்த 'கி. ராஜநாராயணன் கதைகள்' ஆகியவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த பதிவு இந்த நூல்களை படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு.

கி.ரா-வின் அற்புதமான எளிய வட்டார வழக்கு மொழியில் அமைந்த எழுத்து நடை, நாவல் முழுவதும் பல குட்டி, குறுங்கதைகளை சுவாரஸ்யமாக சொல்லும் பாங்கு எல்லாமே அற்புதம்.  கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த பலருக்கும் அவர்களின் பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.  நிறைய கதைகள் என்னை என்னுடைய பால்யத்துக்கு, எங்கள் கிராமத்திற்கு அப்படியே அலேக்காக தூக்கிப்போய்விட்டன.  பல கதைகளும், கதை மாந்தரும், நிகழ்வுகளும் நான் சந்தித்த நபரகளையும், நானோ, எனை நண்பர்களோ சந்தித்த நிகழ்வுகளையும், நினைவுபடுத்தும்.  சில சாதாரண நிகழ்வுகள் கூட கி.ரா-வின் கைவண்ணத்தில் அற்புதமான கதையாகிவிடுகிறது.  நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறப்பான கதைசொல்லிகளில் கி.ரா மிக மிக
 முக்கியமானவர்.


  வரும் தலைமுறையினருக்கு பல விஷயங்கள், அனுபவங்கள், பொருட்கள்(உதாரணமாக முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், முறம் எல்லாம் இருக்கும் இப்பொழுது கிராமங்களில் கூட இல்லை :(... மிக்ஸி, கிரைண்டர் தான் இருக்கிறது), அவற்றின் பெயர்கள், சொற்கள், வழக்குமொழிகள், (கிராமத்து) நடைமுறைகள், வயதில் மூத்தவர்களினை அறிவு, அனுபவ ஞானம் கிடைக்க வழியே இல்லை என்ற நிலையில் நாம்
 இருக்கிறொம்.  அதையும் மீறி நமக்கு அடுத்த தலைமுறையிரும் நம் அனுபவங்களை அவர்களாகவே பெறமுடியவிட்டாலும், குறைந்தபடசம் படித்து அறியவாவது ஒரு வாய்ப்பை கொடுக்கவேண்டும்.  அதற்கு எழுதும் ஆசையம், வாயப்பும் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.  சூட்சுமம் என்னவென்றால் அனுபவங்களை படிப்பவருக்கு பிடிக்கும் வண்ணம் கொடுக்கவேண்டும்.  அதற்கு அனுபவத்தை அப்படியே
 கொடுக்ககூடாது, கற்பனையுடன் குழைத்து கொடுக்க வேண்டும். அதற்கு நாவலும், கதையும்தான் சிறந்த வழி அதாவது மருந்தை தேனில் குழைத்து கொடுப்பதுபோல, அதில் கி.ரா கில்லாடி.  நாவல், கதை எதுவானாலும் அதில் அவரின் அனுபவங்கள் ஆங்காங்கே தேனில் குழைத்ததுபோல சுவையாய் இருக்கும்.


 கி.ரா-வை படித்ததில் இருந்து எனக்கும் கூட நான் அனுபவித்த, சந்தித்த எனக்கு எற்பட்ட அனுபவங்களை ஒரு கதையாகவோ, கட்டுரையாகவோ, படைப்பாக்க வேண்டும் என்கிற  ஆசையாய் இருக்கிறது, நானும் எழுத ஆரம்பிப்பேன், எழுதுவேன் என நம்புகிறேன்.  நான் விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியின் ஆண்டுமலருக்கு ஒரு கதை எழுதி அனுப்பினேன்.  அது ஆண்டிமலரில் பிரசுரமாகியிருந்ததாக நண்பன் மூலமே அறிந்தேன்.  அதுதான் எனது
 பிரசுரமான முதல் படைப்பு, ஆனால் அப்போது நான் முதுநிலை படிப்பிற்காக காரைக்குடிக்கு சென்றுவிட்டதால் அந்த ஆண்டுமலர் எனக்கு கிடைக்கவில்லை :(.  கதையின் தலைப்பு ஞாபகமில்லை, ஆனால் கதை, கல்லூரியில் படித்துவிட்டு வேலைதேடி அலையும் ஒரு இளைஞன் கடைசியில் மனம்மாறி தன் தந்தையுடன் விவசாயத்திற்க
 திரும்புவதுதாக முடியும்.  எழுதும் ஆசையுள்ள அனைவரும் எவ்வித தயக்கமும்மின்றி உடனே ஆரம்பியுங்கள், வலைப்பூவில் போட முடியாவிட்டால் கூட குறைந்த பட்சம் ஒரு காகிதத்திலாவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு விஷயம் தெரியுமா..? கி.ரா பள்ளிப்படிப்பை கூட முடிக்கவில்லை[கி.ரா தன்னைப்பற்றி குறிப்பிடும்போது 'நான்
 மழைக்குதான் பள்ளிக்கூடம் ஒதுங்கினினேன்; ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்' என்பார் ], தன்னுடைய 40 வயதிற்குமேல் தான் எழுத ஆரம்பித்தார்.  ஆகவே எழுத ஆரம்பிக்க ஒருவருக்கு படிப்போ, பதவியோ, வயதோ ஒரு தடையில்லை ஆர்வமும் கற்பனையும்தான் தேவை.  எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை, அதை பகிர்ந்துகொள்ளுங்கள் உலகுடன் வாழ்த்துக்கள்.


Monday, April 16, 2012

நண்பர்களின் வசை காதலுக்கு முன், காதலுக்கு பின்....

கா.மு:
 டேய் நாதாரி உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு....?   அத தூக்கி குப்பதொட்டில போடுடா பன்னி.  10
 மிஸ்டு கால், 4 மெஸேஜ் அனுப்பியும் ஒரு பதிலும் இல்ல.  மொபைல எங்கடா வச்சிருப்ப? எடுத்தே
 பாக்கமாட்டியா...?

கா.பி:
 டேய் மச்சான் ஏண்டா இப்புடி இருக்க...?  நானே வெறும் 50 காசுதாண்டா வச்சிருந்தேன், அதையும் மிஸ்டுகால்
 கொடுக்கதான்டா வச்சிருந்தேன்... இப்புடி அநியாயமா 1/2 ரிங்குலயே அட்டன்(டு) பண்ணிட்டியேடா.. மொபைல
 எந்நேரமும் கையிலயே வெச்சி நோண்டிட்டிருப்பியாடா...

காதல் கவிதைகள்.....

துணிக்கடையில் நீ
எடுத்து பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகள்
எல்லாம் நீ
உடுத்தி பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகளை
பொறாமையோடுதான்
பார்க்கின்றன.


================================

"நான் அழகாக இருக்கிறேனா?" என்று
நீ உன் தெரு
தோழிகளில் ஒருத்தியிடம்
கேட்டுக்கொண்டிருக்கும் அதே
நேரத்தில்
அழகு உன் தெருவிலுள்ள
எல்லோருடமும் கேட்டுக்கொண்டுடிருந்தது
"நான் அவளைப்போல இருக்கிறேனா?" என்று

================================

உன்னொடு பெரிய
இம்சையாய் போய்விட்டது...
உறங்கிக் கொண்டிருக்கும்போது
உன்னைப் பற்றி
ஒரு கவிதை தோன்றி
விழிக்க வைத்துவிடுகிறது.

================================

என் நீண்டநாள்
சந்தேகம்
உன்னால் எப்போழுதும்
அழகாய் மட்டும்தான்
இருக்க முடியுமா?

================================

காதலித்தால்
வாழ்க்கை அழகாகும்
காதலிக்கப்பட்டால்
நாமே அழகாவோம்
நான் உன்னை காதலித்து
என் வாழ்வையும்
உன்னையும்
அழகாக்கிவிட்டேன்
ஒழுங்கு மரியாதையாக
நீயும் என்னை
காதலித்து
உன் வாழ்க்கையை
அழகாக்கிக்கொள்.

================================

என்னாயிற்று எனக்கு?
இப்பொழுதெல்லாம்
உன்னை நினைத்துக்கொண்டே
உறங்கி
உன் நினைவாய்
எழுந்திருக்கிறேன்
என்னை பற்றிய
நினைவாவது
இருக்கிறதா உனக்கு..?

================================

நீண்ட வரிசையில்
சாமி தரிசனத்திற்க்கு
நின்று
தீபாராதனையை காணும்
பகதன் போல்
மகிழ்ந்து உற்சாகமடைகிறேன்
உன்னிடமிருந்து வரும்
குறுந்தகவலுக்கு
காத்திருந்து அது
வரும்போது

================================

யாரிடமிருந்து
குறுந்தகவல்
வந்தாலும்
அது
உன்னிடமிருந்து
வந்ததாக இருக்க
வேண்டுமென்று
எண்ணிக்கொண்டே
அலைபேசியை
எடுக்கிறேன்.

================================

மணிமேகலையின்
அட்சய பாத்திரம்போல
நீ ஏதும்
அழகு பாத்திரம்
வைத்திருக்கிறாயா..?
இத்தனைபேர் கண்களும்
உன் அழகை
ரசித்தபின்னும்
அழகு குறையாமல்
அப்படியே இருக்கிறாயே..

மேலும் படிக்க....