Monday, December 30, 2013

யாளி என்றொரு இந்திய இதிகாச விலங்கு...

நாம் பலரும் கோயில்களுக்கு சென்றிருப்போம் (வேறு வேறு காரணங்களுக்காக, அது முக்கியமில்லை), அதுபோலவே கோயில் தூண்களையும் பார்த்திருப்போம்.  தமிழகக் கோயில்களில் (தென்னிந்திய கோயில்கள் எனக் கொள்க; கர்னாடகா, ஆந்திராவின் சில பல பகுதிகளும், முழுக்கேரளாவும் தமிழர்களாகவே இருந்தார்கள்) மூலவர் எந்த அளவிற்கு அருளுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு சிற்பக் கலைத்திறனுக்கும், அழகுக்கும் முக்கியமானவை கோபுரங்களும், மேற்கூரை ஓவியங்களும் (இன்றைய பெயிண்ட் ஓவியங்கள் அல்ல, பழங்கால ஓவியங்கள்) தூண்களும்.  ஆனால் நாம் பலரும் கொஞ்சம் கூட கவனிக்காமல் விட்டுவிடுகின்ற ஆனால், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை எல்லாம் தான்.  அதில் நம் கோயில் தூண்களுக்கு ஒரு தனிச் சிறப்பான இடம் உண்டு.  சரி தூண்களை ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கு முன்

நாம் எது எதற்காகவெல்லாம் தூண்களை பயன்படுத்துவதுகிறோம் என்று பார்ப்போம்
1. கையில் மீதமிருக்கும் கோயில் பிரசாதங்களான விபூதி, குங்குமம் ஆகியவற்றை கொட்டிவிட்டு, அதற்கு மேலும் கையில் ஒட்டியுள்ளதை தேய்க்க
2. சாய்ந்து உட்கார்ந்து பேச
3. நெய் விளக்கோ, எண்ணெய் விளக்கோ ஏற்றிவிட்டு பிறகு கையின் எண்ணெய்ப் பசையை தேய்த்து நீக்க
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன இங்கே இதை நிறுத்திக்கொள்வோம்.  இப்போது நமது தலைப்பிற்கு வருவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்?  சரி விடுங்கள் டிராகன் என்றால்..?

ஆகா, டிராகன் தெரியாதா எங்களுக்கு..?
வாயிலிருந்து நெருப்பைக் கக்கிகொண்டே பறக்கும் ஒரு Gigantic சீனாக்கார இதிகாச விலங்கு தானே அது. 

சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
By Manjeshpv [CC-BY-SA-3.0]
ஆம், அதேதான், அப்படியே அதற்கு இணையான ஒரு இந்திய இதிகாச விலங்கை தான் யாளி என்பார்கள்.   பெரும்பாலும் கோயிலின் தூண்களிலும், சில இடங்களில் கோயில் கோபுரங்களிலும் இதன் வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.  தூண்களில் இருகாலில் நின்று, இருகால் தூக்கி கூரான பற்கள் தெரிய தும்பிக்கைப்போன்ற ஒன்று தொங்கிக்கொண்டிருக்க, தும்பிக்கையின் அடியில் ஒரு யானை இருக்கும் அமைப்பில் இருக்கும் அந்த இதிகாச விலங்குதான் யாளி.  சில இடங்களில் யாளியின் மீது ஒரு வீரன் அமர்ந்திருப்பது போலவும் சிலைகள் இருப்பதுண்டு (காலத்தால் பிந்திய கோயில்களாக இருக்கக் கூடும்)




யாளி:

முகம் யானை வடிவில் இருந்தால் - யானை யாளி
முகம் சிங்கம் வடிவில் இருந்தால் - சிங்க யாளி
முகம் குதிரை போன்று இருந்தால் - குதிரை யாளி

இந்த மூன்றையும் நான் பல கோயில்களில்/ஓரே கோயிலில் வேறு வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன், இந்த மூன்றும் தான் மிக அதிக அளவில் காணக்கிடைக்கக் கூடியதும் ஆகும்.  இது தவிர வேறு வடிவங்களிலும் உண்டென்று அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்துள்ளேன். 



யாளியை எங்கே பார்க்கலாம் என்று கேட்காதீர்கள், ஓரலவிற்கு பழமையான, தூண்கள் உள்ள எல்லா கோயில்களிலும் யாளியின் உருவத்தைப் பார்க்கலாம்.  சிற்பங்களுக்கென்றே மிகப் பெரிதாகப் பேசப்படும் கோயில்களில் நிச்சயமாகப் பார்க்கலாம், உங்களுக்காக சில முக்கிய கோயில்கள்
1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
2. இராமேஸ்வரம் கோயில்
3. சிதம்பரம் நடராசல் கோயில்
4. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், ஏகநாதர் கோயில்
5. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
6. தென்காசி விஸ்வநாதர் கோயில்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... நீங்கள் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோயிலில் தேடுங்கள், கண்டடைவீர்கள்.  இன்னும் ஒரு விஷயம் யாளியின் உருவம் சிவன், விஷ்ணு, முருகன் கோயில்கள் என்ற பாகுபாடின்றி எல்லா கோயில்களிலும் காணக் கிடைக்கக் கூடியது, ஆகவே யாளியை சமய சார்பில்லா ஒரு இதிகாச விலங்கென்றும் சொல்லலாம். [கருடன், நந்தி போன்றோரெல்லாம் என்னை மன்னிப்பாராக..]

முன்பு எப்போதோ ஒரு இணையப்பக்கதில் யாளியானது யானையை உணவாக உட்கொள்ளும் என்று படித்திருந்தேன்.  அந்த பக்கத்திற்கான உரலியை தவறவிட்டுவிட்டேன், கண்டறியும்போது உங்களுக்கு update செய்கிறேன். நிற்க

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
by  P.K.Niyogi
டிராகனுக்கு சீனாவிலோ, ஹாங்காங்கிலோ வேறு எங்குமோ சிலைகள் உண்டா என்று நானறியேன் ஆனாலும் அதைத் தெரிந்த நமக்கு, நாம் தினந்தோறும்...!? சரி அடிக்கடி...!? சரி விடுங்கள் திருவிழா சமயங்களில் போகும் எல்லா கோயில்களிலும் கிட்டத்தட்ட காணக்கிடைக்கும், அதுவும் தூணுக்குத் தூண் காணக் கிடைக்கும் யாளியை தெரியவில்லை என்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது.  இதை இன்னொரு விதமாகப் பார்க்க வேண்டுமென்றால், அதாவது பொது மக்களிடத்தில் இளைஞர்களிடத்தில் யாளியை கொண்டு சேர்க்கவேண்டுமென்றால் அவர்கள் புழங்கக்கூடிய இடத்தில் யாளியை உலவ விடவேண்டும் (அட, கிராபிக்ஸ், புத்தக, கதை வடிவில்தான் சொல்கிறேன், ஃபேஸ்புக், டிவிட்டரில்தான் சொல்கிறேன் ).  சீனர்கள் அதை செய்தனர், சினிமாவின் உதவியோடு, அதை ஹாலிவுட்டும் பற்றிக்கொண்டது, டிராகன் மக்கள் மனதில் வாழ ஆரம்பித்துவிட்டது.  முடிந்தவரை நாமும் தற்போது மக்கள் புழங்கும் இடங்களான facebook, twitter, g+ போன்ற இடங்களில், திரைப்பட அரங்குகளில் இதை செய்தால் யாளி மறு பிறப்பெடுக்கும் !?

டிராகன் Vs யாளி

இந்தியாவும் சீனாவும் கலை, கலாச்சாரம், வரலாறு, புராண இதிகாசம் தொன்மம் என்று பல விதங்களிலும் மிக மிக பழமையானவை.  ஆனால், டிராகன் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது ஆனால் யாளி இல்லை ஏன் என்ற கேள்வி கேட்டால், பதில்

சீனாக்காரன் தனது மார்கெட்டிங் திறமையால்(கேரளத்து அரசாங்கம்/மக்களைப் போல, இதைப்பற்றி இன்னொருப் பதிவில் எழுதுகிறேன்) டிராகனை உலகம் பூராவும் உலவ விட்டுவிட்டான், அதுவும் இன்றுவரை கிராபிக்ஸ் துணையோடு உலவிக்கொண்டே இருக்கிறது.  நாமும் பெப்பரப்பேனு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டுருக்கோம்.  இன்னிக்கிவரைக்கும் சீனாவப் பத்தி வர்ற(நாம பாக்குற) படத்துல 50% ஒன்னு டிராகன் படத்தோட கதைல இருக்கும், கதைல இல்லனா படத்தோட டைட்டில்ல இருக்கும் சாம்பிள் பாக்கறீங்களா?

குரோச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்
என்டர் த டிராகன்
தி வே ஆஃப் த டிராகன்
ரிட்டன் ஆஃப் த டிராகன்
ரெய்ன் ஆஃப் ஃபயர்
டிராகன் ஹார்ட்
டிராகனுடன் தொடர்புடைய படங்களின்/தொலைக்காட்சித் தொடர்களின் பட்டியல் இந்த சுட்டிகளில் உள்ளது
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film_and_television
http://www.ranker.com/list/best-dragon-movies-list/all-genre-movies-lists

ஆனா, யாளியப் பத்தி நாம படமும் எடுத்ததில்ல, படத்துக்கு டைட்டிலும் வச்சதில்ல.. அட அதவிட ஒரு கத புத்தகங்கூட அதப்பத்தி வந்ததில்லை அப்பறம் எங்கேருந்து யாளினா என்னானு நமக்கு தெரியும்.  கோயிலுக்கப் போறப்ப ஒரு சின்ன கொழந்த இந்த செலையலாம் பாத்துட்டு அது என்னா, இது என்னானு கேட்டா பதில் சொல்ல அப்பா, அம்மாவுக்கும் தெரியல, பொத்தாம் பொதுவா அது ஒரு சாமி, அது ஒரு animal அப்டினு சொல்லி சமாளிக்கிறாங்க என்னத்த சொல்ல...?

கொறஞ்சபட்சம் இதப் படிக்கிறதுல ஒரு நாலு பேராவது(மொதல்ல 4 பேராவது இதப் படிப்பாங்களா?  உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன் ;P) இனிமே கோயிலுக்குப் போகும்போது சாமியோட சேர்த்து கோயில் தூணையும், கோபுரத்தையும், யாளியையும் சும்மானாச்சுக்கும் அப்புடியே வேடிக்க பாத்துட்டு வந்தா சந்தோஷம்.

குறிப்பு 1:
இதை எழுதும்போது கொஞ்சம் கூகுள் செய்தபோது யாளியை மையமாக வைத்து ஒரு தமிழ் நாவல் வந்துள்ளதை அறிந்தேன். 
அதனு சுட்டிகள் விருபா இணையதளத்தில் & சாய்ராம் வலைபூவில்

குறிப்பு 2:
நேற்று நண்பன் கோகுலுடன் அவனுடைய ராயல் என்பீல்டில் திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.  அப்பொழுது அவனுடைய யாளி பற்றிய சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் யாளி பற்றி நிறைய பேருக்கு தெரியவில்லை என்கிற ஆதங்கம் வந்தது.  அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு.

யாளி குறித்து விக்கிப்பீடியாவில் தமிழ்  மற்றும் ஆங்கிலம்

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-12-13 முதல் 28-12-13வரை)

தகவல் மைய(Data centre) பாதுகாப்பு என்பது 2014 -ம் ஆண்டின் அதிக முன்னுரிமை வாய்ந்ததாக இருக்கும் மெக்அஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் மற்றொரு மென்பொருள் நிறுவனமான ரெஸ்பான்சிஸ் (Responsys) நிறுவனத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் அலைபேசி பயனர்களுக்கு 20 GB மேகக் கணிமை சேமிப்பு இடத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் கிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்களை விநியோகிக்க ஆன காலதாமதத்திற்கு பரிகாரமாக $20  பரிசுக் கூப்பனையும், பொருட்களை விநியோகிக்க ஆகும் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-12-13 முதல் 21-12-13வரை)

சாப் நிறுவனம் தனது சப்ளை செயின் தயாரிப்பான கங்கை (Ganges) -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் ரோபோக்களை உருவாக்கும் போஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) என்கிற நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக், டிவிட்டர் போன்று இந்தியாவில் இருந்து ஒரு புதிய மைக்ரோ பிளாகுகிங் சமூக வலைதளம் வெப்லர் (vebbler) என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

2014-ம் வருடம் 16,000 இளநிலைப் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் மைக்ரோ பிளாகுகிங் தளங்களைப் பயன்படுத்தி நிறுவனத்திற்கு ஆட்களை பணியமர்த்தும் முறை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் விரைவிலேயே தனது கீச்சுக்களை மாற்றி/திருத்தி எழுதும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  இது போன்ற சிறப்பம்சம் பேஸ்புக் கமெண்டுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாம்சங் மற்றும் எல்ஜி இரண்டு நிறுவனங்களும் 105 இன்ச் உடன் வளைந்த திரையுடைய ஒஎல்இடி(OLED) தொலைகாட்சிப் பெட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-12-13 முதல் 14-12-13வரை)

எல்ஜி நிறுவனம் தனது வளைவான திரையுடைய நுண்ணறிபேசிகளை இந்தியாவில் டிசம்பரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபிளிப் கார்ட் நிறுவனம் செயல்படுத்திவரும் அதேநாளில் விநியோகம் (Same day delivery) அதற்கு நற்பெயரை ஈட்டித்தந்ததைத் தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் இதைப் பின்தொடரந்து அதேநாள் விநியோக முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

யாகூ நிறுவனம் நிகழ்பட ஓடை சேவையை (Video Streaming) வழங்கும் புதிதாய் தொடங்கிய நிறுவனமான குயிக்ஐஓ(QuikIO) நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளது.

இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT) பற்றிய விளக்கத்திற்கு ) 2020 வாக்கில் 30 மடங்கு அதிகரிக்கும் என்று கார்டனர் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட முறையில் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுண்ணறிபேசிகளில் சக்கைப் போடு போட்ட விளையாட்டு செயலியான ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் தற்போது ஆங்கிரிபேர்ட்ஸ் கோ (angrybirds go)என்கிற பெயரில் கார் ரேஸ் விளையாட்டுச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ருகாலர் தனது பயனர்களை அதிகரிக்கவும் அவர்களின் ஆதரவைப்பெறும் வகையில் தற்போது டுவிட்டருடன் இணைந்து செயல்படவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது வழங்கிக் கணினிகளுக்கான(Server computer) இயக்கிகளை (Processor) தானே தயாரிக்கவுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Sunday, December 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-12-13 முதல் 07-12-13வரை)

ஸோலோ நிறுவனம் Q500 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்சாட் என்கிற குறுஞ்செய்தி பேச்சுச் செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மற்ற பேச்சு செயலிகளைப் போலின்றி இதில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு (சில வினாடிகள்) பெறுநரின் பக்கத்திலிருந்து மறைந்து விடுவதோடு, வழங்கிக் கணினியிலிருந்தும் அழிந்துவிடம்.

இதுவரை கணினிகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த கொந்தர்கள், தற்போது நுண்ணறி தொலைக்காட்சி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவற்றை தங்கள் கட்டளைக்கு ஏற்றவாறு செயல்படவைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நபர் tag செய்யப்படாத புகைப்படங்களிலும் அவரை அடையாளும் காணும் வகையில் ஒரு புதிய அல்காரிதத்தை (Algorithm)  டோரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட லிட்டில் ஐ லேப்ஸ் (Litte Eye Labs) நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

அமேசான் தனது கின்டில் ஃபயர் பலகைக் கணினிகளின் விலையைக் குறைத்துள்ளது.  தன்னுடைய 16 GB பலகைக்கணினியை ரூ. 18,000 மற்றும் 32 GB பலகைக்கணினியை ரூ 26,000 -க்கும் விற்கவுள்ளது.  இது அவற்றின் பழைய விலையை விட ரூ. 4000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பலகைக்கணினிகளை உருவாக்கும் டேட்டா வைண்டு நிறுவனம் தனது யுபிஸ்லேட் சிலேட்டு கணினிகளுக்கு செயலிகளை உருவாக்குவதற்காக  ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியத் தபால் துறையுடன் இணைந்து விநியோகத்தின்போது பணம் பெறுதல் (கேஷ் ஆன் டெலிவரி -Cash on Delivery) முறையில் தனது பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறுது.  இது நடைமுறை சாத்தியமானால் அமேசான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி ஃபிளிப் கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்தியக் நிறுவனங்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டும்.

நௌக்ரி.காம்(Naukri.com) நிறுவனப் புகழ் இன்ஃபோ எட்ஜ்(InfoEdge) நிறுவனம் 10 கோடி ரூபாயை இணைய வழி கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ஆப்லெக்ட் லெர்னிங் சிஸ்டம்ஸ் (Applect Learning Systems) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் விதமாக தனது மேகக் கணிமைச் சேவைக்கான விலையை குறைத்துள்ளது.  இது அமேசானுக்கு நெருக்கடி தரக்கூடிய நிகழ்வாக தொழில்நுட்ப உலகில் பார்க்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனம் அடுத்த 3-6 மாதங்களில் இந்தியாவில் தனது 4G சேவைகளைத் தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் 4G சேவைகளை இந்தியாவில் வழங்கவுள்ள 2-வது நிறுவனம் இதுவாகும்.

கூகுள் நிறுவனம் தனது குரோம் புக் (சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் வெளியிடவுள்ளது, இதன்விலை இந்திய ரூபாய் சுமார் 27,000 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் தனது இருபுறமும் ஒளிபுகக்கூடிய திரைக்கு(transparent dual side screen) காப்புரிமைப் பெறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Monday, December 16, 2013

மினி கதைகள்-2 - பேங்க் லோன்

"டேய், பிரகாஷ் எப்படிடா இருக்க...? தொப்பலாம் போட்டுடிச்சி... ஹூம் கல்யாணம் பண்ணிட்டியாடா?" ஏழு வருட இடைவெளிக்குப் பின்னால் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் கண்ணடித்து கேட்டான் நாகராஜன்.

"மாப்ள.. நல்லாருக்கேன் டா..., நீ எப்டி இருக்க?" என்றான் பிரகாஷ் கையிலருந்த பைலை பின்னால் மறைத்தபடியே..

"அப்றம், பேங்குக்கு வந்திருக்க..."

"ஆமான்டா ஒரு லோன் விஷயமா வந்தேன்.."

"நான் தான்.." என்ற நாகராஜன் முடிப்பதற்குள்..

பிரகாஷ் தொடர்ந்து.. " என்னடா பேங்கு இது... ஒரு A.C இல்ல.. எப்டி sweat ஆகுது பாரு..  சென்னைல எங்க ஆபிஸ்ல பாத்ரூம் கூட A.C"

"விடுடா இது என்ன சென்னையா? இல்ல உன் ஆபீஸா? நம்மூருதான... ஆமா நீ ஏன் இப்டி feel-பண்ற... நாமலாம் ஸ்கூல் கிரவுண்டல லீவுநாள்ல மதியமானா 12, 1 மணினு கூட பாக்காம வேகாத வெயில்ல.." என்று நாகராஜன் முடிப்பதற்குள்,

"டேய் நாகு, உன் கலர் பாரு என் கலர் பாரு,  இப்ப நான் போட்ருக்க சட்ட arrow brand.. 1600 Rupees தெரியுமா? இதுல (இவன் வேற.. )இந்த sweating வேற.."

நாகராஜன், "சரி விடு அது என்ன கைல? Form 16.. Gross Total Inco.."

"டேய் அதுலாம் உனக்கு புரியாது... நீ என்ன பணம் எடுக்க வந்தியா.. ? உனக்கு எப்படியும் ஏடிஎம் கார்டு இருக்காது... செல்லான் ஃபில் பண்ணிட்டு போய் க்யூல நில்லு...
ஆமா, ஸ்கூல் அப்புறம் நான் B.E முடிச்சிட்டு சென்னைல Software Engineer ஆயிட்டேன்.. நீ என்ன BA தமிழா? B.Sc பாட்டனியா? இல்ல +2 வோட நின்டியா?" நக்கலாக கேட்டான் பிரகாஷ்.

சிரித்துக்கொண்ட நாகராஜன், "ஏன்டா Enginnering படிச்சு Software Engineer ஆனவன் மட்டுந்தான் மனுசனா? இல்ல BA தமிழ், பாட்டனிலாம் படிப்பே இல்லேங்கறியா...?"

"அப்டி இல்லடா... நான் என்ன சொல்ல.." என்று பிரகாஷ் முடிப்பற்குள்.

"சரிடா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு, வரேன்" என்று சொல்லிவிட்டு நாகராஜன் பேங்குக்குள் நுழைந்தான்.

AC இல்லாத வங்கியையும், வியர்வையையும் சில நிமிடம் சபித்துவிட்டு, தன் Arrow brand சட்டையை சரிசெய்து கொண்டு பிரகாஷும் உள்ளே நுழைந்தான். காலியாக இருந்த "May I Help You " டெஸ்கில் சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து உட்கார்ந்தாள்.

"Excuse me, I am Prakash.  I want to meet Manager regarding Home Loan"

"Yes, Please.  ஆங்.. மேனேஜர் இப்ப தான் வந்தாரு, நீங்க மீட் பண்ணலாம் போங்க.... First right then stright" விரலில் அபிநயம் பிடித்தாள்.

"டொக் டொக்.. May I come in sir?"

"Yes, come in.." கதவு திறுந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்...

டேபிள் மேலிருந்த போர்டு
" நாகராஜன் M.Com.,
  மேலாளர்.  "  என்று வரவேற்றது.