Showing posts with label world cinema. Show all posts
Showing posts with label world cinema. Show all posts

Tuesday, May 8, 2012

நொ மேன்'ஸ் லேண்ட்(No Man's Land-2001 Bosnian movie) - போஸ்னிய மொழித் திரைப்படம் ஒரு பார்வை


கன்னிவெடியில் மாட்டிக்கொண்ட ஒருவனின் கதி என்னவாகிறது என்கிற ஒரு வரி விஷயம்தான் கதை.

 கதை சொல்லப்பட்டவிதமும், திரைக்கதையும்(இயக்குனரின் பெயர் டேனிஸ் டனோவிக்)  உங்களைப்  படத்திலிருந்து ஒரு நொடி கூட இப்படி அப்படி நகரவிடாது.  படத்தில் 3-லிருந்து 5 பேர் மட்டுமே மிக முக்கிய கதாபாத்திரங்கள், மற்ற அனைத்தும் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்துபோகக்கூடிய சிறிய பாத்திரங்கள் மட்டுமே.  படத்திற்கு imdb-ல் 8.0 மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளது(பலரின் ஓட்டுகளின் சராசரி).  இரு நாடுகளின் எல்லையில் கதை துவங்குகிறது, ஒரு வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி ஒரு நாட்டின் வீரர்கள்அணியாக வருகிறார்கள் அதிகப்படியான பனிமூட்டததின் காரணமாக வழிதப்பி இரவில் ஒரு இடத்தில் தங்குகிறார்கள்.  மறுநாள் பொழுது விடிந்ததும் எதிரிநாட்டின் படைக்கருகில் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள் அதை அறிந்து சுதாரிக்கும்முன்பே தாக்குதலுக்கு ஆளாகி ஒருவனைத்தவிர(அவனும் இரண்டு புல்லட்டுகளை உடம்பில் சுமந்துகொண்டிருக்கிறான்) எல்லோரும் இறந்துவிடுகிறார்கள்.  எதிரிநாட்டு படை 2 பேரை அனுப்பி யாராவது உயிரோடு இருக்கிறார்களா.. பிரச்சனைகள் ஏதும் உண்டா என அறிந்துவர அனுப்புகிறது.  அவர்கள் இறந்துபோன ஒருவனை இழுத்துவந்து ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் ஒரு கன்னிவெடியை வைத்து அதன் மேல் அவன் பிணத்தை கிடத்தி கன்னிவெடியை செயலாக்குகிறார்கள்.  இறந்த உடலை தூக்கினால் கன்னிவெடி வெடித்துவிடும், அதனால் பிணத்தை தூக்க வரும் அவனைச்சேர்ந்த மற்ற ஆட்களும் அப்பொழுது இறந்துவிடுவார்கள் என்று 2 பேரில் ஒருவன் விளக்கமளிக்கிறான்.  அப்பொழுது பதுங்கியிருந்த அடிபட்ட எதிரி வீரன் 2 பேரில் ஒருவனை சுட்டுக்கொன்றுவிடுகிறான்.  இதன் பிறகு கொஞ்சநேரத்தில் கன்னிவெடியின் மேல் கிடத்தப்பட்டவன் மயக்கத்தில் இருந்து எழுகிறான் அவன் உண்மையில் சாகவில்லை.  அதன் பிறகு அந்த மூவருக்கும் இடையில் என்ன விதமான சம்பாஷனைகள் நடக்கிறது, அவனைக்காப்பாற்ற மற்ற இருவரும் என்ன யோசனை செய்கிறார்கள் அது செயலாக்கப்பட்டதா அவன் காப்பாற்றப்பட்டானா.. என்பதுதான் மீதிப்படம்.

இதற்க்கிடையில் ஊடகங்கள் தங்கள் சேனலை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றன,  அரசியல், இராணுவம், ஐநா(UN) பாதுகாப்புப்படை போன்றவற்றிற்க்கு போரின்போது என்னென்ன பிரச்சனைகள், நிர்பந்தங்கள் வருகின்றன... அவை எப்படி கையாளப்படுகின்றன என்பது அருமையாக காட்டப்படுள்ளது.

கன்னிவெடியில் மாட்டிக்கொண்டவனை காப்பாற்ற வரும் வல்லுனர், கன்னிவெடியினை பார்த்ததும் இவனை காப்பாற்ற முடியாது, அவன் முன்னரே இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  கடைசியில் சூழலின் நிர்பந்தத்தாலும், கட்டாயத்தினாலும் அந்த கன்னிவெடியில் சிக்கிய மனிதன் காப்பாற்றப்படாமலே ஊடகத்திற்கும், வெளி உலகத்திற்கும் காப்பற்றப்பட்டதாக காட்டப்பட்டு படம் முடிகிறது.  படம் முடியும்போது எதுவெல்லாம் நாம் உண்மை என நம்புகிறோமோ அதில் பல உண்மைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை உணருவதும் அதனால்  உங்கள் மனம் கணத்திருப்பதும் உண்மை.

1 1/2 மணிநேரம் மட்டுமே ஓடும் சிறிய படம் ஆனால் கண்டிப்பாக எல்லோரும்(குறிப்பாக வித்தியாசத்தை விரும்பும் உலக சினிமா விரும்பிகள்) பார்க்கவேண்டிய திரைப்படம்.

விருதுகள்:
இந்த திரைப்படம் 2002-ம் ஆண்டிற்கான சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதையும், 2001 ஆண்டு சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதையும், 2001-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

குறிப்பு:
No man's land - என்கிற ஆங்கில வாக்கியத்திற்கு யாரும் இதுவரை ஆக்ரமிக்காத, குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்குறிய நிலப்பகுதி என்று பொருள்.

மற்றுமொரு குறிப்பு:
இந்தப்படம் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வென்ற அதே 2001-ம் ஆண்டில்தான் இந்தியாவிலிருந்து இந்தி திரைப்படமான அமீர்கானின் 'லகான்' படமும் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டியிலிருந்தது.