Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Monday, July 23, 2012

படித்த புத்தகம் - ஜெயமோகனின் உலோகம் நாவல்


புத்தக தலைப்பு :  உலோகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
வகை : சாகச எழுத்து(த்ரில்லர்)


 ஈழத்து இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வருகிறான்.  அவன் இயக்கத்தின் சில பல உத்தரவுகளை நிறைவற்றிவட்டு (கொலைகள்தான்) டில்லிக்கு செல்கிறான்.  இயக்கத்தின் முக்கியப்புள்ளியான ஒருவர் இந்தியா வந்து, இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், இயக்கத்தின் துரோகியாக கருதப்படும் அவரை கொல்வதுதான் அவனுக்கு இடப்பட்ட பணி.  அதை அவன் எப்படி செய்கிறான், செய்வதற்க்குள்ளான காலத்தில் அவன் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது, என்ன சிக்கல்கள், பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை அவனுடைய பார்வையிலே சொல்லுவதுதான் இந்த நாவல்.   ஒரு கொலைகாரன் எப்படி செயல்படுவான், அவனுடைய எச்சரிக்கைத்தன்மை விழிப்புணர்வு, நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி ஊகிப்பது, பொறுமை, காத்திருப்பு போன்று பல விஷயங்களை கண்முன்னால் விரிக்கிறது இந்த நாவல்.

 கதை முழுவதுமே ஒரு flash back உத்தியில்  விவரிக்கப்பட்டுள்ளது.  கதையின் கரு கொலையும், துரோகமும் மட்டுமே, வரும் உத்தரவுக்கு அப்படியே அடிபணியம் ஒரு இயக்கப்போராளியின் சுயசரிதை எனக்கூட இந்நாவலை சொல்லலாம்.  கதையினூடே ஆங்காங்கே ஜெயமோகனின் முத்திரையான பல வாக்கியங்களைப் பார்க்கலாம்.  ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களில் வருவதுபோலொவே இதிலும் காமம் பற்றிய கருத்துகளும், நிகழ்வுகளும் உண்டு.  போர் பற்றி அறியாத, குண்டுவீச்சு பயம் பார்த்திராத, உயிர்பயம் கண்டறியாத சினிமா மட்டுமே வாழக்கை என வாழ்பவர்களை ஆங்காங்கே பகடி செய்திருக்கிறார்.

 நாம் பத்திரிக்கையில் படிக்கும் பல கொலைகளும் இப்படி நடந்து, வேறு சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கும என்பதற்க்கு கூட சாத்தியங்கள் அதிகமே.  இயக்கங்கள் செயல்படும் விதம், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா -raw- என பல விஷயங்கள் கதையின் போக்கில் வந்து போகிறது.  ஒரு நாவலை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கென ஒரு ஒப்பற்ற தனித்தன்மையை(uniqueness) தந்து, அந்தந்த பதாபாத்திரமாகவே யோசித்து எழுதும் ஜெயமோகனின் அந்த "டச்" இந்த நாவலிலும் காடு, ஏழாம் உலகம் நாவலில் இருப்பதுபோலவே உண்டு. நாவலின் பல கதாபாத்திரங்கள் இலங்கைத்தமிழர்கள் என்பதால் ஆங்காங்கே இலங்கைத்தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதை முதலிலேயே குறிப்பிட்டுளார்.

 நான் படித்த ஜெயமோகனின் பிற நாவல்களான காடு, ஏழாம் உலகம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டளவில் உலோகம் சற்று குறைவே(பக்க எண்ணிக்கை, தரம் 2-ம்).  ஆனால், உலோகம் எழுதப்பட்டுள்ள தளம் வேறு.