Monday, November 17, 2014

கல்லூரித் தோழி ...

கல்லூரி காலத்தில்
கள்ளமில்லா நம் நட்பை
காதலென்று நண்பர்கள்
கிசுகிசுக்கும் போதெல்லாம்
சிரித்துவிட்டு போய்விடுவேன்
என் சிரிப்பே அவர்கள்
கிசுகிசுவுக்கு தீனியாயிருக்கும்

6 வருடங் கழிந்த
பிறிதொரு நாளில்
மாலை நேர இரயில் ஒன்றில்
நீதானா அது என்று
ஐயத்தோடு காண்கிறேன்
கண்டும் காணாததுபோல்
என் பார்வை தவிர்த்தாய்
உன் அருகிருந்தது உன்
கொடுங்கோல் கணவனாய்
இருந்திருக்கக் கூடும் என்றிருந்தேன்

என்னுடன் வந்த நம் நண்பன்
நீதானென்றான்;
உனக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை என்றும் சொன்னான்
ஏனோ,
அவனும் கிசுகிசுக்கவில்லை
எனக்கும் சிரிக்க திராணியில்லை

என் பார்வை தவிர்த்த
உன் பார்வையில் ஏதோ ஒன்று
புரிந்தது...
நண்பனோடு இரயில் பெட்டியில்
வேறொரு இடம் மாறினேன்.


No comments:

Post a Comment