Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, April 25, 2017

உனக்கான என் முத்தங்கள

உனக்கான என் முத்தங்களும்
  எனக்கான உன் முத்தங்களும்
உனக்கு பிடிக்காமல் போன
  அந்த நொடி
நமக்கான நம் காதல்
  செய்வதறியா சிறுபிள்ளையாய்
ஒர் ஓரமாய் நின்று
  தேம்பிக்ககொண்டிருந்தது.

பசித்துப் பசி

பசிக்கு என்ன சாப்பிடலாம்
 பிரட் ஜாம் தண்ணீர்.. ம்ஹூம்
11 ருபாய் செலவாகும்
 பன்னும் டீயும்.. மஹூம்...
8 ருபாய் செலவாகும்
 பார்லே-ஜி, டைகர் பிஸ்கட்.. ம்ஹூம்
6 ருபாய் செலவாகும்
  வறுத்த கடலை, தண்ணீர்.. ம்.. ம்..
5 ரூபாய் செலவாகும் பரவாயில்லை...
 இரவு தண்ணீர் மட்டும் குடித்து சமாளிப்போம்.
புசித்ததை விடப் பசித்ததே அதிகம்
 ஏழையின் வயிறு....
அது பசிக்கோ, பசித்தோ புசிப்பதில்லை
 செலவைப் பார்த்தே புசிக்கிறது.

Tuesday, June 30, 2015

கவிதையும் காத தூரமும்...

  நானே கூட அவ்வப்போது பல வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எதையாவது கொஞ்சமாக சந்தம் சேர்த்து எழுதி கவிதை என்று கூறிக்கொள்வதுண்டு என்றாலும் இப்போதும் எனக்கு கவிதை என்றால் காத்தூரம் தான்(சங்கப்பாடல்கள், திருக்குறள், சமய இலக்கியங்கள்  (கவிதையில் சேர்ப்பார்களா?), பாரதி தவிர்த்து).  பெரும்பாலும் யாரிடமும் நான் கவிதை எழுதியிருக்கிறேன் படியுங்கள்/பாருங்கள் என்று சொல்வதில்லை குறிப்பாக நண்பர்களிடம், சொன்னால் விளைவு எப்படி இருக்கும் என்று ஓரளவிற்க்கு ஊகித்திருப்பதினால்.  ஆனாலும், நானே எழுதிய  (பெரும்பாலும் காதல் அவ்வப்போது சமூகக்கோபத்தில்) இந்த  கவிதை என்று நானே சொல்லிக்கொள்ளக்கூடிய விடயங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்து கட்டக்கடைசியாக நம்முடைய வலைப்பூ சும்மாதானே இருக்கிறது என்று அதில் பதிவேற்றிவிடுவேன் (அப்பாடா ஒரு பாரம் இறங்கியது). 

  இந்த இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் சென்றால் படிமம், பின்/முன்/நடு/centre/side நவீனத்துவம், கூறுகள், வெளிப்பாடுகள், திறப்புகள் என்று எதையாவது பேசி நம்மை பயமேற்றிவிடுவார்கள் இல்லையா.  அப்படி நம்மை கொஞ்சம் உசுப்பேற்றி, பயமேற்றி "டேய், கார்த்திகேயா அப்புடி என்னா தாண்டா எழுதியிருப்பானுங்க? படிச்சிதான் பாத்துடேன்" என்று ஒரு கட்டத்தில் முறுக்கேறி கவிதை படிக்கலாம் என்று திருவான்மியூர் நூலகத்தில் தேடியபோது கலாப்ரியா கவிதைகள் கிடைத்தது.  வண்ணதாசன்(கவிதை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் வண்ணதாசனில்(கல்யாண்ஜி) இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை படித்ததாக ஞாபகம், இதுவரை அவரைப் படிக்கவில்லை :( ), ஜெயமோகன் உள்ளிட்ட பல பெரும் ஆளுமைகள் முன்னுரை, பின்னுரை, மதிப்புரை எல்லாம் எழுதியிருந்ததால் எடுத்துவிட்டேன்.   சுமாராக 2 renewal-ம்  சில நாட்களும் ஆயின படித்து முடிக்க (நாவல்களே கூட வருடக்கணக்கில் படித்திருக்கிறேன்/படித்துக்கொண்டிருக்கிறேன் :p).  படித்து முடித்தப்பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை, கவிதைகளைக் கூட கடந்து வந்துவிட்டேன்.  கடைசியாக ஜெயமோகன் அவர்கள் ஒரு 70+ பக்கத்திற்கு எழுதியிருந்த விஷயங்களைத்தான் கடைசிவரை முழுமையாக படிக்க/புரிந்து கொள்ள முடியவில்லை(ஜெயமோகன் ஐயாவுக்குத் தெரிந்தால் ஒரு முழுக் கட்டுரை எழுதி என்னை (அ) என்னைப்போன்றோரை திட்டவும் கூடும். என்ன செய்ய? நம் குருவி மூளைக்கு அவ்வளவுதான் போல... ).  ஜெயமோகன் எனக்குப் பிடித்த, என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்; அவரின் காடு, ஏழாம் உலகம், உலோகம் போன்றவற்றை எல்லாம் ஒரு தவம் போல படித்திருக்கிறேன் (இன்னும் விஷ்ணுபுரம் படிக்கவில்லை).  ஏழாம் உலகம் எல்லாம் படித்து அழுதிருக்கிறேன்.  ஆனாலும் கலாப்ரியா கவிதைகள் புத்தகத்தில் அவர் எழுதியிருந்ததை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை. 

  கொஞ்சமாக கவிதையை புரிந்து/பிடித்து படித்ததென்றால் அது கவிக்கோ அப்துல் ரகுமானின் பால்வீதி, மு. மேத்தாவின் கவிதைகள், தபூ சங்கரின் கவிதைகள் (இலக்கிய பெரியவர்கள் தபூ சங்கரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்) மற்ற சில மட்டும்தான்.  அதைத் தவிர்த்து பயத்துடனேயே அணுகி பாதியில் விட்டவைதான் அதிகம்.  ஆனாலும், இப்பொழுது விட்டு விடுவதாக இல்லை "கலாப்ரியா கவிதைகள்" நூலகத்தில் திருப்பி கொடுத்தாகிவிட்டது இப்போது "ஜெயகாந்தன் கவிதைகள்" எடுத்துவந்துள்ளேன்.   பார்ப்போம் எவ்வளவு தூரம் போகிறேன் என்று... :)

Thursday, January 29, 2015

பேசா மொழி...


அவளும் மென்பொறியியல் தான்
  அலுவலகம் கூட என் அலுவலகத்தின் எதிரில்தான்
அவள் அழகுக்கும் குறைவில்லைதான்
  அனுதினமும் மின்தூக்கியில் அருகேதான்
ஆண்டுகளாய் இதே நிலைதான்
   ஆனாலும்,  " நீ அழகாய் இருக்கிறாய் " என்று
சொல்லவில்லை தான்(நான்)
         ...
அடுத்த மொழி
        ...
வார இறுதியில் எல்லாம் ஊருக்குச் செல்வேன்
  வாரம் தவறாமல் குருவாயூர் இரயிலில் திரும்புவேன்
வாராவாரம் அவளும் வருவாள்
  இருவருக்குமே ஒதுக்கீடில்லா பயணச்சீட்டுதான்
இடம் கிடைத்ததும் அமர்ந்துவிடுவாள்
  ஆங்கில நாவல் உண்டு அவளுக்கு
அழகுதமிழ் நூலகப் புத்தகம் உண்டு எனக்கு
  அமைதியோடு அழகு கொஞ்சும் முகம் அவளுக்கு
அவளோடு பேசிட துடிக்கும் அகம் எனக்கு
  நாட்கள் ஆண்டுகளாய் ஆயின நித்தம்
எனக்குள் பேசா மொழிகள் தான் மிச்சம்

என் பேசா மொழிகளை எல்லாம்
  சேர்த்துக்கொண்டே வருகிறேன்
கோடைகால எறும்பு போல
   வசந்தகால தேனீ போல
பேசித் தீர்க்கும் நாளுக்காகவும், ஆளுக்காகவும் ;)

( பேசித்தீர்க்க ஆள் கிடைச்சாச்சு...... :) :D   பேசிக்கொண்டிருக்கிறேன்,  என்றும் தீராமல் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற  பேராவலுடன்.... )

Wednesday, January 28, 2015

நீ பிடித்ததினால்...

நான் நிறைய கதைகள் படிப்பேன்
  எனக்கு கதைகள் பிடிக்கும்
இப்பொழுது கவிதை வாசிக்கிறேன்
  நீ பிடித்ததினால்...


Wednesday, December 31, 2014

யாரோ ஒருவனின் புத்தாண்டு

சந்தோஷம், குதூகலம்
சரக்கு, சைட் டிஷ்
பீச், போன் பேச்சு
பைக் உறுமல்கள்
பார்ட்டி, பஃப்
கேக் வெட்டி கொண்டாட்டம்
...
கந்தலாடையில் மூடிய உடலும்
முகம் மறைத்த சடைமுடியும்
Beggar
By Chandrashekhar Leo Vuppuluri (Own work)
[CC BY-SA 3.0], via Wikimedia Commons
கையில் பழைய பாலித்தின்
கவரோடு,
தான் யாரென்றும் தெரியாத
தன்னை யாருக்கும் தெரியாத
'யாரோ ஒருவன்'

நெடிதுயர்ந்த பன்னாட்டு
ஐடி நிறுவனத்தின் சுவரோடு
வெறுமையாக இருந்த
சாலையை வெறித்தபடி
நிற்கிறான்..
.
.
கூட்டமா விரையும்
உறுமிய பைக்குகளில் இருந்து
ஒரு குரல்
'ஹேப்பி நியு இயர்'
.
.
முகம் மறைத்த
அந்த யாரோ ஒருவன்
தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறான்
..
மீண்டும் சாலை
வெறுமையானது.

Tuesday, November 18, 2014

கல்லூரி(காதல்) கணக்கு


By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
கல்லூரி கணக்கு
நோட்டில் காதல்

கவிதை கிறுக்கியிருக்கிறிர்களா?
'ஆம்' 
.
.

அப்படியா.. வாழ்த்துகள்
கையை கொடுங்கள் இப்படி...
ஏனென்றால்,
கணக்கு தெரியாத
வாழ்கையை விட
காதல் தெரியாத

வாழ்கை வெறுமையானது...





Monday, November 17, 2014

கல்லூரித் தோழி ...

கல்லூரி காலத்தில்
கள்ளமில்லா நம் நட்பை
காதலென்று நண்பர்கள்
கிசுகிசுக்கும் போதெல்லாம்
சிரித்துவிட்டு போய்விடுவேன்
என் சிரிப்பே அவர்கள்
கிசுகிசுவுக்கு தீனியாயிருக்கும்

6 வருடங் கழிந்த
பிறிதொரு நாளில்
மாலை நேர இரயில் ஒன்றில்
நீதானா அது என்று
ஐயத்தோடு காண்கிறேன்
கண்டும் காணாததுபோல்
என் பார்வை தவிர்த்தாய்
உன் அருகிருந்தது உன்
கொடுங்கோல் கணவனாய்
இருந்திருக்கக் கூடும் என்றிருந்தேன்

என்னுடன் வந்த நம் நண்பன்
நீதானென்றான்;
உனக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை என்றும் சொன்னான்
ஏனோ,
அவனும் கிசுகிசுக்கவில்லை
எனக்கும் சிரிக்க திராணியில்லை

என் பார்வை தவிர்த்த
உன் பார்வையில் ஏதோ ஒன்று
புரிந்தது...
நண்பனோடு இரயில் பெட்டியில்
வேறொரு இடம் மாறினேன்.


Thursday, April 3, 2014

கவிதை

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
ஞானப்பழம்

ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்

புரியாதவனுக்குப்
புதிர்

புரிந்தவனுக்கும்
கைவராக் கலை

எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்

கவிஞனின்
பரம்பரைச் சொத்து

வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.

Wednesday, January 8, 2014

காதல் கணக்கு


Canova-Psyche Revived By Cupids Kiss detail arm framing
 என் கல்லூரிக் காலத்தில்
கணக்கு நோட்டில்
 நான்
கணக்கெழுதியதை விட
 காதல்
கவிதைகள் எழுதியதுதான்
 அதிகம்
எனக்கு கணக்கு
 வரவில்லையென்று
போராசிரியருக்கு புரிந்துவிட்டது
  ஆனால்
காதல் வந்துவிட்டதென்று
 என் பேரழகி
உனக்குதான் புரியவில்லை.

Wednesday, August 21, 2013

எங்கள் சென்னை.... ஆகஸ்ட் 22-2013 -- 374 வது சென்னை தினம் இன்று


 எங்கள் சென்னை....

Chennai montage
Image By Nashcode (Transfered by RaviC/Original uploaded by Nashcode) [CC-BY-3.0], via Wikimedia Commons

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை

வைணவ வைதீகர்க்கு
   வல்லிக்கேணி பார்த்தனும்
சைவ சமயத்தோர்க்கு
   மயிலை கபாலீசனும்
கிறித்தவ அன்பர்க்கு
    சாந்தோமும், பரங்கிமலையும்
முசுலீம் நண்பர்களுக்கு
    ஆயிரம் விளக்குமாய்
பொலிவுடன் விளங்கும்
     எங்கள் சென்னை.

வண்டலூரில் வன விலங்கும்
  பள்ளிக்கரணையில் பன்னாட்டு பறவைகளும்
முட்டுக்காட்டில் முதலைப் பண்ணையும்
  வேடந்தாங்களில் வெளிநாட்டுப் பறவையுமாக
இறையும் இயற்கையும்
  ஒன்றெனப் போற்றிப்
பொலிவுடன் விலங்கும்
   எங்கள் சென்னை.

பழையோர்க்கு மயிலையில்
 அறுபத்து மூவர் உலா
புதியோர்க்கு தி.நகரில்
  ஆடைவாங்க வீதி உலா
பழையோர்க்கு கன்னி மாறா
 கன்னிமாரா நூலகம்
புதியோர்க்கு எண்ணில் அடங்கா
  நூலோடு அண்ணா நூலகமென்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

கற்க ஐஐடி
  சுற்ற தி.நகர்
கலைக்கு கலாக்ஷேத்திரா
 கானத்திற்கு சங்கீத அகாடமி
காண கோளரங்கம்
  கால்நனைக்க மெரினாவென
இன்னும் இன்னும்
 எத்தனையோ பெற்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை.

Tuesday, June 18, 2013

பாப்பா கவிதை..

பிஸ்கட் பேதம்..

'ப்பா.. பப்பி ப்பா...'
'நம்ம வீட்ல இருக்குறதுதான் பப்பி.
இது டாக்(dog) டா செல்லம்'
பிஞ்சுக்கு பிஸ்கட்டுடன்
பேதத்தையும் ஊட்டினார் அப்பா.


பார்த்தால் பசியாறும்..

குட்டிபாப்பாவுக்கு
 குட்டிக் கரண்டியில்
சோறுட்டினாள் அம்மா
 பார்த்தோருக்கெல்லாம்
பசியாறியது.

Wednesday, March 27, 2013

கவிதைகள்...


ரகசிய ரகசியங்கள்..

என் பெற்றோரிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் சகோதரியிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் சகோதரியிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் நண்பர்களிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் நண்பர்களிடமும்
 சொல்லாத ரகசியங்களும்
என்னிடம் இன்னுமும்
 ரகசியமாயிருக்கிறது.
மிச்சமிருக்கும் இந்த
 ரகசிய ரகசியங்களை
நினைக்கும்போது சில
சிரிப்பையும், சில அழகையையும்
தருகின்றது..


 பிடித்த கவிதை எது?

கவிஞன் ஒவ்வொருவனும்
 கர்பிணிப் பெண்தான்
மனதில் கருவான கவிதை
 பிரசவம் ஆகும் வரை
அதிலும், தலைபிரசவம்
 அப்பப்பா சொல்லிமாளது
தான் கொண்டது பொய்
 கர்பமா என்று சந்தேகம்
கவிஞனுக்கே இருக்கும்
 தலைக்கவிதை பிரசவமாகும் வரை...
பெற்றெடுத்த தாய் போல்தான்
 கவிஞனும் அவன்
பெற்றக் கவிதைப்
 பிள்ளைகளில் பேதம் பார்ப்பதில்லை
தயவுசெய்து எந்த கவினிடமும்
 கேட்காதீர்கள் உங்கள்
கவிதையில் பிடித்தது எது என்று.

Saturday, March 23, 2013

சமூகமும் கவிதையும்..


போராட்டம்...
அந்தக்கால அரசியல்வாதிகள், தியாகிகள்
போராடியதெல்லாம் எம்மாத்திரம்
இன்று நாங்கள் போராடுகிறோம்,
காவிரி தண்ணீருக்காக,
கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக
பசித்திருக்கம் ஜீவன்களுக்காக,
ஈழத்திற்க்காக,
பெண்ணுரிமைக்காக,
அணு உலைக்காக,
என்ன? எப்படியென்று விளக்க வேண்டுமா?
ஐயோ! எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை..
இதோ தொடர்ந்து போராட
இன்னொரு புதுப்பிரச்சனை கூட கிடைத்துவிட்டது.
வாருங்கள் போராடுவோம்..
லைக்கும்(like), கமெண்டுமாக(comment)
முகநூல்(facebook) பக்கத்தில்...


என் பெயர்...
எனக்கு ஞாபகமிருக்கிறது
பச்சை வண்ண ஆடைதான்
எனக்கு எப்போதும் விருப்பமானது
அதை அணிந்து சல சலவென
சத்தம்போட்டு ஓடிக்கொண்டிருப்பேன்
அப்பொழுதுதான் அது நடந்தது
ஒருவன் அல்ல, பல பேர்
ஒரு நாள் அல்ல, பல வருடங்கள்
ஒரு நேரமல்ல, எந்நேரமும்
என்னை மாறி மாறி சீரழித்தார்கள்
சிலர் என் அழகை அள்ளிப்போனர்கள்
சிலர் அழுக்கை இட்டு நிரப்பினார்கள்
என்னை விட்டுவிட சொல்லி கதறினேன்
காப்பாற்றச் சொல்லி மன்றாடினேன்
கேட்பாரில்லை..
மேலும், மேலும் சீரழிக்கப்பட்டேன்
கடைசியாக புள்ளிவிபரம் கொடுத்தார்கள்
என் அளவுக்கு சீரழிக்கப்படவர்கள்
யா(ஆ)றும் இல்லையாம்..
என் வனப்பை இழந்து
நாதியற்று கிடக்கிறேன்
என் பெயர் "பாலாறு"

மனதை மிகவும் பாதித்த பாலாறு பாழ்பட்டது குறித்தான ஆவணப்படம் யூடியூபில் https://www.youtube.com/watch?v=mxksl0VgBOY


எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்...
ஏற்கனவே அழித்தொழுத்துவிட்டீர்கள்
சின்ன சிட்டுக்குருவியில் ஆரம்பித்து
பெரிய காட்டுயானை வரை
இனி அழிந்துபோன இனங்களில்
எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்..
இப்படிக்கு,
உங்களுக்காகவே வாழ்ந்த
ஆறு, மலை, ஓடை, ஏரி, குளம், வாய்க்கால்...

மதிப்பெண்...
கல்வி கார்ப்பரேட் தொழிலானது
வாத்தியார்கள் வியாபாரிகளானார்கள்
பள்ளிப்பிள்ளைகள் பிராய்லர் கோழிகளனார்கள்
மதிப்பெண், மதிப்பிழந்தது.


Friday, March 22, 2013

தோழ(ழி)மைக் கவிதைகள்..


முன்னாள் தோழி
இனி உன்னோடு என்னால்
 உரிமையாக பேச முடியாது
என் சுகத்தையோ, சோகத்தையோ
 பகிர முடியாது
என் சந்தேகத்தை கேட்க
உன் சந்தேகத்தை தீர்க்க முடியாது
ஏனென்றால்
நான் முன்பிருந்த நானில்லை
நீ முன்பிருந்த நீயில்லை
விட்டுச் சென்றுவிட்டன
ஜிவன்கள்
ஏனென்றால்.. நீ
இன்னொருவனுடைய இந்நாள் மனைவியான
என்னுடைய முன்னாள் தோழி..


அழகான அந்த நாள்
உன் திருமணத்திற்குப் பின்
நாம் தொடர்பற்றுப் போனபின்
11 மாதங்கழித்து
ஒரு வழக்கமான என்னுடைய
அவசர காலையில்
என் அறையின்
முகத்தளவு கண்ணாடியில்
தலைவாரிக்கொண்டிருந்த போது
புதிய எண்ணிலிருந்து அழைப்பு
"ஹலோ.." மறுமுனையில்
"களுக்" என்கிற உன் சிரிப்பு..
எனக்கே ஆச்சரியம்தான்
எப்போதுமே தொலைபேசியில் குரலை
அடையாளம் காணமுடியாத நான்
உன் குரலை, சிரிப்பை மட்டும்
எப்படி கண்டுகொண்டேனென்று
உனக்குத் தெரியாது
உன் அழைப்பிற்குப்
பிறகான என்னுடைய அந்தநாள்
எவ்வளவு அழகாயிருந்தென்று... ;)


ஞாபகமிருக்கிறதா...?
உனக்கு என் ஞாபகம்
எப்போதாவது வந்ததுண்டா?
இப்படி நீ கேட்டபோதெல்லாம்
"இல்லை" என்று மட்டும்தான்
நான் சொல்லியிருக்கிறேன்..
இப்பொழுது அடிக்கடி
உன் ஞாபகம் வருகிறது..
சொல்ல முடியவில்லை..
ஏனென்றால்,
நான் உரிமையோடு பேசும் என் தோழி
இன்று இன்னொருவனின் உரிமை மனைவி.

Monday, April 16, 2012

காதல் கவிதைகள்.....

துணிக்கடையில் நீ
எடுத்து பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகள்
எல்லாம் நீ
உடுத்தி பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகளை
பொறாமையோடுதான்
பார்க்கின்றன.


================================

"நான் அழகாக இருக்கிறேனா?" என்று
நீ உன் தெரு
தோழிகளில் ஒருத்தியிடம்
கேட்டுக்கொண்டிருக்கும் அதே
நேரத்தில்
அழகு உன் தெருவிலுள்ள
எல்லோருடமும் கேட்டுக்கொண்டுடிருந்தது
"நான் அவளைப்போல இருக்கிறேனா?" என்று

================================

உன்னொடு பெரிய
இம்சையாய் போய்விட்டது...
உறங்கிக் கொண்டிருக்கும்போது
உன்னைப் பற்றி
ஒரு கவிதை தோன்றி
விழிக்க வைத்துவிடுகிறது.

================================

என் நீண்டநாள்
சந்தேகம்
உன்னால் எப்போழுதும்
அழகாய் மட்டும்தான்
இருக்க முடியுமா?

================================

காதலித்தால்
வாழ்க்கை அழகாகும்
காதலிக்கப்பட்டால்
நாமே அழகாவோம்
நான் உன்னை காதலித்து
என் வாழ்வையும்
உன்னையும்
அழகாக்கிவிட்டேன்
ஒழுங்கு மரியாதையாக
நீயும் என்னை
காதலித்து
உன் வாழ்க்கையை
அழகாக்கிக்கொள்.

================================

என்னாயிற்று எனக்கு?
இப்பொழுதெல்லாம்
உன்னை நினைத்துக்கொண்டே
உறங்கி
உன் நினைவாய்
எழுந்திருக்கிறேன்
என்னை பற்றிய
நினைவாவது
இருக்கிறதா உனக்கு..?

================================

நீண்ட வரிசையில்
சாமி தரிசனத்திற்க்கு
நின்று
தீபாராதனையை காணும்
பகதன் போல்
மகிழ்ந்து உற்சாகமடைகிறேன்
உன்னிடமிருந்து வரும்
குறுந்தகவலுக்கு
காத்திருந்து அது
வரும்போது

================================

யாரிடமிருந்து
குறுந்தகவல்
வந்தாலும்
அது
உன்னிடமிருந்து
வந்ததாக இருக்க
வேண்டுமென்று
எண்ணிக்கொண்டே
அலைபேசியை
எடுக்கிறேன்.

================================

மணிமேகலையின்
அட்சய பாத்திரம்போல
நீ ஏதும்
அழகு பாத்திரம்
வைத்திருக்கிறாயா..?
இத்தனைபேர் கண்களும்
உன் அழகை
ரசித்தபின்னும்
அழகு குறையாமல்
அப்படியே இருக்கிறாயே..

மேலும் படிக்க....