Tuesday, June 27, 2017

பொறியியல் தவிர்த்து என்ன படிக்கலாம்?

கடந்த சில வருடங்களாகவே பொறியியல் மீதான மதிப்பும் மோகமும் வெகுவாக குறைந்துவிட்டதென்பது நாம் கண் முன் காணும் நிதர்சனம் (முந்தைய பதிவு -> பொறியியல் மீதான மதிப்பும் மோகமும் குறைந்தது ஏன்? ).  பொறியியல் தவிர்த்து வேறு என்ன படிக்கலாம் என்பது இப்போது பிள்ளையை பெற்ற எல்லோருக்கும் இருக்கும் பெருங்குழப்பம், குறிப்பாக கடந்த/நடக்கும் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி படித்த/படிக்கும் பிள்ளையை பெற்றோருக்குத்தான் தலைவலி அதிகம்.  அவர்களுக்கு இருக்கும் மனக்குழப்பம் போதாதென்று அக்கம் பக்கத்தினர், சுற்றம், நண்பர்கள் என்று ஆளாளுக்கு அவர்களால் முடிந்த அளவு அழுத்தத்தை கூட்டிக்கொண்டே இருப்பார்கள்.  இப்பொழுதுதான் 'என்னா மார்க்கு பொண்ணு எடுத்திருக்கு?' என்கிற கேள்விக்கு 1042-வது முறையாக பதில் சொல்லி மதிப்பெண் குறைவாயிருந்தால் அதற்கு 1043 காரணங்கள் சொல்லி, 1100-க்கு மேலிருந்தால் நாங்கள் 1190 எதிர்பார்த்தோம் என்று ஒரு பில்டப் எல்லாம் கொடுத்து ஓய்திருப்பார்கள்.  வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அடுத்து ஆரம்பித்திருப்பார்கள்,

'என்னப்பா மகனை மேல என்ன படிக்கவைக்கப் போற?'

'அந்த காலேஜ்லயா? அது சரியில்லயாமே... என் சகலப்பாடி பையன் கூட அங்கதான் படிச்சான், இந்தா இப்ப வெட்டி ஆபிசரா சுத்திவந்துட்டுருக்கான்...'

'என்னப்பா எந்த காலத்துல இருக்குற நீ? ம்... கம்ப்யூட்டர்க்கு சேக்கறேங்கற... அங்க ட்ரம்ப் எல்லாரையும் தொறத்திட்ருக்கான்னா, இங்க ப்ரேம்ஜியும் தொறத்திட்டுருக்காறாம்..
என்னாது... யப்பா அந்த ப்ரேம்ஜி இல்ல அசிம் ப்ரேம்ஜிப்பா விப்ரோ கம்பெனி இருக்கு இல்ல அதுக்கு ஓனரு.  ஏதோ ரெசசனாம் ஐடி-ல எல்லாரையும் வேலைய உட்டு எடுக்குறாங்களாம்.  இப்ப போய் கம்ப்யூட்டர் இன்ஞ்சினியரிங் சேக்கற... என்னமோ பாத்து பண்ணுப்பா'

'என்னாது அவ்ளோ தூரத்துல இருக்கற காலேஜ்லயா?  ஏன் இங்கலாம் சீட் கெடைக்கலயா... ஒத்தப் பொண்ண பெத்து வச்சுகிட்டு தூரத்துல ஆஸ்டல்ல சேக்கறேங்கற.  பாத்துக்கப்பா காலம் ரொம்ப கெட்டுக்கெடக்கு...'

'இப்பலாம் இஞ்சினியரிங்கு எங்கப்பா மதிப்பிருக்கு சொல்லு..'

'BA தமிழா? நல்ல ஆளுப்பா நீ'

சரி என்னதான் படிக்கலாம் பொறியியல் தவிர்த்து (பொறியியல் படிக்காதீர்கள் என்று சொல்வதல்ல இப்பதிவின் நோக்கம்).

மிக மேலோட்டமா சொல்வதானால் இப்படி சொல்லலாம்

1. அடிப்படை அறிவியல் ( இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல் போன்று)
2. அடிப்படை அறிவியல் சார்ந்த சிறப்புப் பிரிவுகள் ( உயிர்வேதியியல், உயிரிதொழில்நுட்பவியில் போன்று)
3. கலைப் பிரிவுகள் (தமிழிலக்கியம், ஆங்கிலம், வரலாறு போன்று)
4. கணினி மற்றும் அது சார்ந்த பிரிவுகள் (கணிப்பொறியில், கணினி பயன்பாட்டியில் போன்று)
5. வேளாண் அறிவியல்
6. துணை மருத்துவப் படிப்புகள் (செவிலியர், மருந்தாளுணர், மருத்துவ ஆய்வுக்கூடப் படிப்புகள்)
7. மாற்று மருத்துவப்படிப்புகள் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி - தற்போதுள்ள நடுவண் அரசு இப்பாரம்பரிய மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வையும் பல சலுகைகளையும் கொடுத்துவருகிறது)
8. வணிகவியல், நிர்வாகவியல்
9. உளவியல்
10. திரைப்படம் மற்றும் கிராபிக்கஸ், அனிமேஷன் சம்பந்தப்பட்ட படிப்புகள்
11. நுண்கலை பாடப்பிரிவுகள்
12. தொலைக்காட்சி மற்றும் ஊடகம் தொடர்பான பாடங்கள்
தொல்லியல், கல்வெட்டியல், சைபர் செக்யூரிட்டி, நூலக அறிவியல் ....

இப்படிப்புகளை எங்கு படிக்கலாம் -> ஆண்டு வாரியாக இந்தியா டுடே நீல்சன் சர்வே.


முடிந்தால் இதன் கூடவே தட்ட்ச்சு, கணினியில் அடிப்படை டிப்ளமோ, பிரெஞ்ச் போன்ற அயல் நாட்டு மொழி பயிலல் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்டால் பணிவாய்ப்பின் போது முன்னுரிமை கிடைக்கும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது.  மேற்சொல்லப்பட்ட பாடப்பிரிவுகள் எதுவும் எந்த தரவரிசை அடிப்படையிலும் சொல்லப்படவில்லை.

நினைவில் கொள்ளுங்கள்
1. எல்லா காலத்திலும் எல்லா துறையிலுமே திறமைசாலிகளுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்
2. அவர்களுக்கு அடுத்தப்படியாக திறமையை வளர்த்துக்கொள்ள தயாராய் இருப்பவர்களுக்கும் வேலை இருந்துகொண்டு தான் இருக்கும்
3. எது ஒன்றையும் புதுவிதமாய் அணுகுபவர்களுக்கும் , புதியதாக ஒன்றை முயற்ச்சி செய்வோருக்கும் வரவேற்பு குறையாமல் இருந்துகொண்டேதான் இருக்கும்
4. படித்தது வேறு, பார்த்த வேலை வேறு என்று இருப்பவர்கள் பலரும் மிகப்பெரும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு.  (நண்பன் திரைப்படம் நினைவிருக்கிறதா?)

மனதிற்க்குப் பிடித்த ஒன்றையே உங்கள் வேலையாக மாற்றிக்கொண்டால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் வேலையாக ஒன்றைப் பார்க்க வேண்டாம் என்பார்கள்.  அப்படி ஒன்றை உருவாக்கிக்கொள்ளுகள்.


குறிப்பு;
நீங்கள் அறிந்த பிற பாடப்பிரிவுகளை பின்னூட்டமிட்டால் மற்றோருக்கும் பயன்படும்.

Wednesday, June 21, 2017

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பின் மதிப்பும் அதன் மீதான மோகமும் குறைந்தது ஏன்?

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பொறியியல் படிப்பை புறந்தள்ளும் வாடிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  ஆண்டுதோறும் குறைந்து வரும் அல்லது கூடாமலே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்ப விற்பனையைப் பாரத்தாலே தெரியும்.  இந்தியாவில் மிக அதிகமாக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடம் வகித்து வருகிறது.  இதிலிருந்தே தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை (500+) அறிந்துகொள்ளலாம்,  தமிழகம் முழுவதும் பரவியுள்ளா இந்த பொறியியல் கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகத்தின் கீழே நிர்வாகம் செய்ய சிரமமாயிருக்கிறது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகமானது கோவை, நெல்லை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களாக பலவாறு பிரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கீழேயே கொண்டு வரப்பட்டது தனிக்கதை.

சரி நாம் பேச வந்த விஷயத்திற்கு வருவோம்.  வணிகத்தில் அடிப்படை விஷயமாக ஒன்று சொல்வார்கள் எந்த ஒரு பொருளின் மதிப்பும் "தேவை மற்றும் கிடைத்தல்"க்கு  (Demand & Supply) இடையேயான இடைவெளியைப் பொறுத்தே பின்வறுமாறு அமையும்,

1. தேவை அதிகம் & கிடைத்தலும் அதிகம்  = சமநிலை நிலவும்
2. தேவை அதிகம் & கிடைத்தல் குறைவு   =  சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு கூடும்)
3. தேவை குறைவு & கிடைத்தல் அதிகம் = சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு குறையும்)
4. தேவை குறைவு & கிடைத்தல் குறைவு = சமநிலை நிலவும்

இதுதான் பொறியியல் படிப்பிலும் நிகழ்ந்தது.  முதலில் தேவைக்கும் கிடைத்தலுக்குமான இடைவெளி மேலே சொல்லப்பட்டவாறு எண் 2-ல் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக 1-க்கு நகர்ந்து இப்போது 3-ல் இருக்கிறது.  நம் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள் துறையைச் சேர்ந்த யாராவது ஒருவர் பெங்களூருவிலோ, ஐதராபாத்திலோ இருப்பார். சென்னையில் எவ்வளவோ பன்னாட்டு, நம்நாட்டு நிறுவனங்கள் இருக்க அவர்கள் காடு கரையை விட்டு, சுற்றம் நட்பை விட்டு பெங்களூருக்கும், ஐதராபாத்திற்கும் ஏன் போக வேண்டும்? இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் தேவை & கிடைத்தலும் ஒரு காரணம்.  சென்னையின் மென்பொறியாளர் தேவை ஓரளவிற்க்கு நிவர்த்தியானதும் அவரின் மதிப்பு குறையும் அது அவரது சம்பளம் முதற்கொண்டு பல விஷயங்களைப் பாதிக்கும்.  அதன் காரணமாக தேவை (அதிகம்) இருக்கும் உள்ள இடத்தை நோக்கி அவர் தள்ளப்படுவார் அல்லது தகுதிக்குக் குறைவான வேலை அல்லது சம்பளத்திற்கு அவர் தள்ளப்படுவார்.  (ஒரு உதாரணத்திற்க்காக மென்பொறியாளர் என்பதை எடுத்துக்கொண்டேன் இது எல்லா துறைக்கும் பொருந்தும்.  மென்பொறியாளர்கள் மன்னிக்க..)

2ல் ஆரம்பித்த விஷயம் மெல்ல எல்லோர் மனதிலும் நிறைந்து பொறியியல் படித்தால் போதும் கைநிறைய சம்பாதிக்கலாம் காலத்திற்கும் சுகமாயிருக்கலாம் என்று நினைக்க வைத்தது.  அடுத்த பத்து வருடங்களுக்கு கூட்டங்கூட்டமாக திருப்பதி கோயில் மொட்டை போல எல்லோரும் அ(ப)டித்தோம். 

1-ஐ நோக்கி நகர்ந்தபோதும் பெரிய வித்தியாசம் இல்லை காடு கரை விற்று, கறவை மாட்டை விற்று, நில புலன்களை விற்று, வங்கிக் கடன் பெற்று என மீண்டும் தொடர்ந்தோம்.  மெல்ல NASSCOM போன்ற அமைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் மென்பொறியாளர்களில் கிட்டத்தட்ட 25% பேர் கூட மென்பொறியாளராக தேவையான தகுதிகளோடு இல்லை (குறிப்பாக மென் திறன்கள் - soft skills) என ஆரம்பித்தன.  அதில் பெரும் உண்மையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

3-ல் இருக்கும்போது திடீரென பார்த்தால் திருப்பதி மொட்டை போல தெருவெல்லாம் பொறியாளர்கள் சொல்லப்போனால் வீட்டிற்கு 2 பொறியாளர்கள்.  தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை  அல்லது வேலைக்கேற்ற தகுதியில்லை என்கிற நிலை.  எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று யோசித்து VAO ஆரம்பித்து வங்கி clerk தொடங்கி கலை அறிவியல், பள்ளி படிப்பு மட்டும் முடித்தோரே பெரும்பாலும் விண்ணப்பிக்கும் எல்லா பணிக்கும் வரும் விண்ணப்பங்களில் பேர் பாதி பொறியாளர்கள் என்கிற நிலை வந்துவிட்டது. 

கடந்த மூன்று வருடங்களில் ஒரு பாடப்பிரிவில் 10 பேர் கூட நிரம்பாத பல பொறியியல் கல்லூரிகள் இருந்தன.  மூடவா, விற்கவா பள்ளியாக திருமணமண்டமாக மாற்றவா என கல்வித் தந்தைகள் யோசிக்கும் நிலையும் வந்துவிட்டது.  

4-ஐ எட்டும் வரை அடுத்த சில வருடங்கள் இப்படியேத்தான் போகும் பிறகு 4ல் சொன்னது போல் சமநிலை நிலவும்.  மீண்டும் இந்த சுழற்சி தொடங்கும். 

தற்போது மேற்சொன்ன 4 வித முறைகள் தாண்டி 'கிடைத்தல் அதிகமாகி பொருளின் தரமும் குறைந்தால்' என்கிற புதியதோர் சூழலில்தான் சிக்குண்டுள்ளோம்.   இச்சூழல் 4-ஐ எட்டி 2-ற்குப் போகும் வரை பொறியியலின் மீதான மதிப்பும், மோகமும் குறைந்தேதான் அல்லது இப்படியேதான் இருக்கும்.


இதெல்லாம் பொது விதிகள்...  ஆனால் எப்போதுமே தகுதியானவற்றிற்றுக் தரமானவற்றிக்கு அதற்கான மதிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்.  வணிக வெற்றிக்கு ஒன்று சொல்வார்கள் 'ஒன்றை முதலில்  செய்ய வேண்டும் அல்லது சிறப்பாகச்/தரமாகச் செய்ய வேண்டும்'.  ஒன்றை முதலிலோ அல்லது சிறப்பாகவோச் செய்ய வேண்டும் என்றால் அது மனதிற்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் அதாவது மனதிற்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும்.  என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொறியியல் தான் உங்கள் மிகு விருப்பம்(passion) என்றால் இப்போதும் கூட அதையே தேர்ந்தெடுங்கள் யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.  இது போன்றதொர் பொன்னான வாய்ப்பு கிடைப்பது அரிது ஆமாம் உண்மையாகத்தான் சொல்கிறேன்.  பலரும் வேண்டாம் என்று ஓதுக்கும்போது உங்கள் மதிப்பெண் குறைவாய் இருந்தாலும்  நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு நீங்கள் விரும்பிய கல்லூரியில் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.  அதை விடாமல் பற்றிக்கொண்டு மேலேறுவது உங்கள் திறம்.  இவ்வளவு கல்லூரிகள் (சில/பல தரமற்ற) தோன்றியதும் அதனால் ஊரெல்லாம் பொறியாளர்களாய் மாறியதும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றும், பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல் பெற்றோர் பொறியியலில் சேர்த்து விட்டதும் தான் காரணம்.  பிள்ளைகளின் விருப்பம் அறியுங்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொடுங்கள் ஆனால் மேற்படிப்பிற்கான முடிவை அவர்களை எடுக்க விடுங்கள் அவர்கள் முடிவெடுக்கத் தடுமாறினால் உதவுங்கள் ஆனால் திணிக்காதீர்கள், நல்லதோர் தலைமுறை நாளை அல்ல நாள்தோறும் உருவாகும்.

அடுத்தப் பதிவு -> பொறியியல் தவிர்த்து என்ன படிக்கலாம்?

Tuesday, April 25, 2017

கடவுச்சொல்லில் கவனம் தேவை, 7 சிறந்த கடவுச்சொல் நடைமுறைகள்

1.  உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளை உடையதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

2.  அகராதியில் இருக்கும் வார்த்தையாக இல்லாமல் இருக்கட்டும்

3.  'root', 'password', '12345', 'admin', 'user' போன்றவற்றை கண்டிப்பாகப் பயன்படுத்தாதீர்கள்.   இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களை முன் பின் தெரியாதவர் திருடாமல் இருப்பதற்காக.

4. 'உங்கள் பெயர்', 'பட்டப் பெயர்', 'பிறந்தநாள்', 'மனைவி அல்லது குழந்தைகள் பெயர்', 'ஊர் பெயர்', 'தொலைபேசி அல்லது செல்பேசி எண்', 'உங்களுக்கு பிடித்த பூ, பழம், விளையாட்டு, நடிகர், நடிகை, காதலன், காதலி, நண்பன் பெயர்' போன்றவற்றையும் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.  இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களைப் பற்றி நன்கு அறிந்த, தெரிந்த நண்பர்கள்/எதிரிகள் திருடாமல் இருக்க.

5. கடவுச்சொல் எப்போதும் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்ணுருக்கள்(Numbers), சிறப்பு எழுத்துருக்கள்(Special characters) ஆகியன கலந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

6. கடவுச்சோல் பொருளற்றதாக இருப்பது மிகவும் நல்லது. உதாரணத்திற்கு SY)p#2Ss4!, !Al*8$5whFt என்பன போன்று.

7. எழுத்துக்களை மாற்றிப் பயன்படுத்துங்கள் எடுத்துக்காட்டாக (S, $, 5 ), (0, o, O), (g, 9), (a, @) போன்றவை ஒன்று போல இருப்பதால் 's' என்கிற எழத்திற்குப் பதிலாக 5 என்கிற எண்ணைப் பயன்படுத்துவது.  (இதனால் நீங்களும் மறக்காமல் இருப்பீர்கள்)

உனக்கான என் முத்தங்கள

உனக்கான என் முத்தங்களும்
  எனக்கான உன் முத்தங்களும்
உனக்கு பிடிக்காமல் போன
  அந்த நொடி
நமக்கான நம் காதல்
  செய்வதறியா சிறுபிள்ளையாய்
ஒர் ஓரமாய் நின்று
  தேம்பிக்ககொண்டிருந்தது.

பசித்துப் பசி

பசிக்கு என்ன சாப்பிடலாம்
 பிரட் ஜாம் தண்ணீர்.. ம்ஹூம்
11 ருபாய் செலவாகும்
 பன்னும் டீயும்.. மஹூம்...
8 ருபாய் செலவாகும்
 பார்லே-ஜி, டைகர் பிஸ்கட்.. ம்ஹூம்
6 ருபாய் செலவாகும்
  வறுத்த கடலை, தண்ணீர்.. ம்.. ம்..
5 ரூபாய் செலவாகும் பரவாயில்லை...
 இரவு தண்ணீர் மட்டும் குடித்து சமாளிப்போம்.
புசித்ததை விடப் பசித்ததே அதிகம்
 ஏழையின் வயிறு....
அது பசிக்கோ, பசித்தோ புசிப்பதில்லை
 செலவைப் பார்த்தே புசிக்கிறது.