Tuesday, June 30, 2015

கவிதையும் காத தூரமும்...

  நானே கூட அவ்வப்போது பல வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எதையாவது கொஞ்சமாக சந்தம் சேர்த்து எழுதி கவிதை என்று கூறிக்கொள்வதுண்டு என்றாலும் இப்போதும் எனக்கு கவிதை என்றால் காத்தூரம் தான்(சங்கப்பாடல்கள், திருக்குறள், சமய இலக்கியங்கள்  (கவிதையில் சேர்ப்பார்களா?), பாரதி தவிர்த்து).  பெரும்பாலும் யாரிடமும் நான் கவிதை எழுதியிருக்கிறேன் படியுங்கள்/பாருங்கள் என்று சொல்வதில்லை குறிப்பாக நண்பர்களிடம், சொன்னால் விளைவு எப்படி இருக்கும் என்று ஓரளவிற்க்கு ஊகித்திருப்பதினால்.  ஆனாலும், நானே எழுதிய  (பெரும்பாலும் காதல் அவ்வப்போது சமூகக்கோபத்தில்) இந்த  கவிதை என்று நானே சொல்லிக்கொள்ளக்கூடிய விடயங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்து கட்டக்கடைசியாக நம்முடைய வலைப்பூ சும்மாதானே இருக்கிறது என்று அதில் பதிவேற்றிவிடுவேன் (அப்பாடா ஒரு பாரம் இறங்கியது). 

  இந்த இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் சென்றால் படிமம், பின்/முன்/நடு/centre/side நவீனத்துவம், கூறுகள், வெளிப்பாடுகள், திறப்புகள் என்று எதையாவது பேசி நம்மை பயமேற்றிவிடுவார்கள் இல்லையா.  அப்படி நம்மை கொஞ்சம் உசுப்பேற்றி, பயமேற்றி "டேய், கார்த்திகேயா அப்புடி என்னா தாண்டா எழுதியிருப்பானுங்க? படிச்சிதான் பாத்துடேன்" என்று ஒரு கட்டத்தில் முறுக்கேறி கவிதை படிக்கலாம் என்று திருவான்மியூர் நூலகத்தில் தேடியபோது கலாப்ரியா கவிதைகள் கிடைத்தது.  வண்ணதாசன்(கவிதை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் வண்ணதாசனில்(கல்யாண்ஜி) இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை படித்ததாக ஞாபகம், இதுவரை அவரைப் படிக்கவில்லை :( ), ஜெயமோகன் உள்ளிட்ட பல பெரும் ஆளுமைகள் முன்னுரை, பின்னுரை, மதிப்புரை எல்லாம் எழுதியிருந்ததால் எடுத்துவிட்டேன்.   சுமாராக 2 renewal-ம்  சில நாட்களும் ஆயின படித்து முடிக்க (நாவல்களே கூட வருடக்கணக்கில் படித்திருக்கிறேன்/படித்துக்கொண்டிருக்கிறேன் :p).  படித்து முடித்தப்பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை, கவிதைகளைக் கூட கடந்து வந்துவிட்டேன்.  கடைசியாக ஜெயமோகன் அவர்கள் ஒரு 70+ பக்கத்திற்கு எழுதியிருந்த விஷயங்களைத்தான் கடைசிவரை முழுமையாக படிக்க/புரிந்து கொள்ள முடியவில்லை(ஜெயமோகன் ஐயாவுக்குத் தெரிந்தால் ஒரு முழுக் கட்டுரை எழுதி என்னை (அ) என்னைப்போன்றோரை திட்டவும் கூடும். என்ன செய்ய? நம் குருவி மூளைக்கு அவ்வளவுதான் போல... ).  ஜெயமோகன் எனக்குப் பிடித்த, என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்; அவரின் காடு, ஏழாம் உலகம், உலோகம் போன்றவற்றை எல்லாம் ஒரு தவம் போல படித்திருக்கிறேன் (இன்னும் விஷ்ணுபுரம் படிக்கவில்லை).  ஏழாம் உலகம் எல்லாம் படித்து அழுதிருக்கிறேன்.  ஆனாலும் கலாப்ரியா கவிதைகள் புத்தகத்தில் அவர் எழுதியிருந்ததை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை. 

  கொஞ்சமாக கவிதையை புரிந்து/பிடித்து படித்ததென்றால் அது கவிக்கோ அப்துல் ரகுமானின் பால்வீதி, மு. மேத்தாவின் கவிதைகள், தபூ சங்கரின் கவிதைகள் (இலக்கிய பெரியவர்கள் தபூ சங்கரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்) மற்ற சில மட்டும்தான்.  அதைத் தவிர்த்து பயத்துடனேயே அணுகி பாதியில் விட்டவைதான் அதிகம்.  ஆனாலும், இப்பொழுது விட்டு விடுவதாக இல்லை "கலாப்ரியா கவிதைகள்" நூலகத்தில் திருப்பி கொடுத்தாகிவிட்டது இப்போது "ஜெயகாந்தன் கவிதைகள்" எடுத்துவந்துள்ளேன்.   பார்ப்போம் எவ்வளவு தூரம் போகிறேன் என்று... :)

No comments:

Post a Comment